Sunday, December 30, 2007

பன்னிரண்டு வருட நட்புக்கு சாவுமணி!!

நண்பா! கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியவில்லை,நம் நட்புக்கு இன்னும் சில தினங்களில் முடிவுரை.

எத்தனை வருட பழக்கம் நமக்குள், சுமார் பன்னிரண்டு வருடங்கள்.கல்லூரியில் ஆரம்பித்த நட்பு இப்போது திடீரென முடிய போகிறது என நினைக்கும் போது துக்கம் தொண்டை அடைக்கிறது.

யோசித்து பார்க்கிறேன்.இந்த பன்னிரண்டு ஆண்டுகளில்,

நிலையில்லா சந்தோஷம் வந்த போதும் உன்னிடம்தான் பகிர்ந்தேன்

மனமுடைந்த சோக தருணங்களிலும் நீதான் மனதை தேற்றினாய்

தேவையில்லாத குழப்பங்கள் மனதை வாட்டிய போதும் நீதான் குழப்பங்கள் தீர்த்து தெளிவான சிந்தனை தந்தாய்

என் மீது பலமுனை தாக்குதல்கள் பல பக்கங்களிலிருந்து வந்த போதும், நீதான் தைரியம் தந்தாய்

எனக்கென்று நண்பர்கள் யாரும் கிடையாது.எல்லா நேரங்களிலும் உன்னிடம்தான் ஓடி வந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் நீ எனக்களித்த நட்பை,அரவணைப்பை யாரும் எனக்கு தந்ததுமில்லை, கண்டிப்பாக இனி யாரும் தரவும் முடியாது.

நாமுண்டு நம் நட்புண்டு என்றிருந்தோம் என் திருமணம் வரை.என் மனைவி உன்னை இவ்வளவு வெறுப்பாள் என நான் நிச்சயம் எண்ண வில்லை.நம் நட்பு தொடர கூடாதென இந்த இரண்டு ஆண்டுகளாய் அவள் என்னிடம் சண்டை போடாத நாளில்லை.கல்லூரி முடிந்து நான் புதிதாய் அலுவலத்தில் சேர்ந்த புதிதில்,தினமும் குறைந்தது பத்து தடவையாவது சந்திப்போம் இல்லையா..ம்ம்ம் அதெல்லாம் பொற்காலம்.நீ இருந்ததால்தான் இரவு பகலாக உழைத்தாலும் என்னால் புத்துணர்ச்சி கொள்ள முடிந்தது( அதெல்லாம் சும்மா உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கீறீர்கள் என்கிறாள் என் மனைவி).என் திருமணத்துக்கு பின் நம் சந்திப்பு நான்கைந்து முறைதான் என்ற நிலைக்கு தள்ள பட்டோம்.நாளடைவில் என் மனைவி சம்மதம் இல்லாமல் உன்னை பார்க்கவே முடியாது என்ற நிலையில், இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை உன்னை பார்ப்பதற்கே நான் தலைகீழாய் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.

இனியும் இந்த நிலை வேண்டாம்.என் மனைவியிடம் நம் நட்பை முறித்து கொள்கிறேன் என்று சத்தியம் செய்து விட்டேன்.உன்னிடம் சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது.இனி நாம் சந்திக்க வேண்டாம். நான், 2007ம் ஆண்டுக்கு மட்டுமல்ல, நம் நட்புக்கும் விடை தருகிறேன்.என்னால் முடியுமா என தெரியவில்லை ஆனால் வேறு வழியில்லை நண்பா!

பன்னிரண்டு வருடங்களாய் என்னுடன் தினமும் இருந்த என் உயிர் நண்பனே, அடி மனதில் இருந்து சொல்கிறேன், உன் போல் ஒரு துணை எனக்கு நிச்சயம் இனி கிடையாது.கண்ணீர் துளிகளுடன் விடை தருகிறேன்!! போய் வா நண்பா!

கடைசி முறை உன் பேரை அழுத்தமாக உச்சரிக்க ஆசை..................

கோல்ட் பிளேக் கிங்ஸ்

ஆஹா! என்ன ஒரு ஆனந்தம் பேர் சொல்லும் போதே..பை பை நண்பா!!!!

Saturday, December 22, 2007

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை..

அரைத்தூக்கத்தில்,பேப்பர் சீக்கிரம் படிக்க வேண்டுமே என்கிற அவதியில் பல்துலக்கல்,சொந்தக்காசில் வாங்கும் தினமலர்,எக்கானாமிக் டைம்ஸ், ஓசி தினகரன்( பக்கத்து வாடகைக்கடைக்கு வரும் நாளிதழ் நம்ம வீட்டில்தான் விழும்),பேப்பரினூடே சூடாக காபி,டாய்லெட்-ல் இருக்கும் லைப்ரரியில் (வீட்டுகாரம்மா அப்படித்தான் சொல்வாங்க) இருந்து ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக் கொண்டு காலைக்கடன்,ஆபிஸ் சமாச்சரங்கள் மனசுக்குள் டிரையிலர் ஓட குளியல், cnbc+ndtv profit மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டே டிபன்,கர்சீப்,பனியன்..இத்யாதி காணோம்னு அலப்பறையை பண்ணிகிட்டே டிரெஸ்ஸிங்,வீட்ல கொடுக்கற சோத்து டப்பாவை பத்து வருசம் ஓல்ட் மாடல் வண்டில மாட்டிக்கிட்டு,phone-ல இருக்கிற player playlist-ல ஒண்ணை செலக்ட் பண்ணி headset காதுல மாட்டிகிட்டு, பன்னிரெண்டு வருசமா போற அதே ரூட்டுல இருபது நிமிசம் வண்டியை ஓட்டிக்கிட்டு போயி,பன்னிரெண்டு வருசமா உட்கார்ந்து தேஞ்சு போன அதே நாற்காலி,என் வாழ்நாள்ல என்கூட அதிக நாள் இருந்த கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணி,ரிப்ளை பண்ணி, கத்தி கத்தி, டென்ஷனாகி, ஒவ்வொரு shipment-ம் ontime-ல ship ஆகணும்னு விரட்டி, செஞ்சு செஞ்சு அலுத்து போன அதே வேலை,அதே முகம்,
அதே தவறுகள்,அதே பிரச்னைகள், தீர்வுகள்,மதியச்சாப்பாடு,அப்பப்ப பங்குச்சந்தை பக்கம் எட்டி பார்த்து எதையாவது வாங்கி,எதையாவது வித்து, வீட்டுகாரம்மாக்கிட்ட இருந்து இன்னும் கிளம்பலையான்னு போன் வந்தவுடனே அவசர அவசரமா எல்லாத்தையும் அள்ளி உள்ள போட்டுட்டு,வேக வேகமா வீட்டுக்கு போய் இரண்டு வயது செல்லப்பெண்ணுடன் விளையாட்டு, மீண்டும் அதே cnbc யோட டின்னர்..அப்புறம் வீட்டுக்காரம்மாவோட லெக்சர் கேட்டுகிட்டே தூக்கம்..


ஏன்,ஏன் இப்படி..எல்லோருக்குமே இப்படித்தானா.. மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!வேற வழியே இல்லையா!!தப்பிக்கவே முடியாதா!!