Saturday, May 10, 2014

கானல் நீர்! -2

கானல் நீர்! - 1

பரபரப்பான நாளொன்றின் மதியம். அலுவலகத்தில் உணவை எடுத்து பரப்ப ஆரம்பித்த நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு.

அருகில் அமர்ந்திருந்த சரவணன் பேசி விட்டு என்னருகில் தொலைபேசியை தள்ளினான்.

“யார்டா?”

”பேசு” என சிரித்தான்.

”ஹலோ”

குரல் கேட்டவுடனேயே அந்த அவஸ்தையான பிசைவு. ””நீங்க?””

“சத்யா””

“ஏய்! என்ன இது சர்ப்பரைஸ்””

“சொல்றேன்! பஸ்ஸ்டாண்ட்ல இருக்கேன்””

“எந்த பஸ்ஸ்டாண்ட்ல?”

“மாடே! உங்க ஊர்லதான்.பசிக்குது.வந்து சீக்கிரம் கூப்பிட்டு போ.திருப்பூர் பஸ் நிக்கற இடத்துல வெயிட் பண்றேன்.இங்க நிக்கவே பிடிக்கல””            

“சரி! சரி! வை..உடனே வரேன்”

இவள் எப்படி இவ்வளவு உரிமையோடு ”மாடே” என வைகிறாள் என்ற குழப்பம் மற்றும் குதூகலத்துடன் ””டேய்! சாப்பிடலையா?”” என்ற சரவணனுக்கு “பசங்ககிட்ட லன்ச் கொடுத்துடு மாப்ள” என சொல்லி விட்டு வேகமாக வெளியேறினேன்.

வெயிலில் வந்திறங்கி வேர்வை வழிய நின்றிருந்தாள். ஏதேதோ பேச வேண்டும் என்ற ஒத்திகையோடு வண்டியை கொண்டு போய் நிறுத்தினேன். உடனே வந்து வண்டியில் உட்கார்ந்தவள், ”சீக்கிரம் எங்கேயாவது நிழல்ல கூட்டிப் போய் உட்கார வை” என்றாள்.

“கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடறியா”

“பசிக்குதுன்னு சொன்னேன்ல”

“சரி!சரி!போலாம்”

நேரே கொண்டு போய் ஊரின் சிறந்த ரெஸ்ட்டாரண்டில் நிறுத்தி, உள்ளே போய் சில்லிடும் அறையில் அமர்ந்தோம்.கொஞ்ச நேரம் கண்மூடி ஆசுவாசமானாள்.கண் திறந்து சிரித்தாள்.

சிரித்தேன்.

”ஏண்டா அசடு வழியறே”

“பொண்ணுங்க முன்னாடி சிரிச்சு பழக்கமில்லை”

“அதான் தெரியுமே” என்று மீண்டும் சிரித்தாள்.

குளிர் உள்ளேயும்,வெளியேவும் இதமாக இறங்கி கொண்டிருந்தது.

“என்ன சாப்பிடறே”

“எது வேணும்னாலும்”

வகைக்கொன்றாக இன்னதென்று இல்லாமல் சராமாரியாக ஆர்டர் செய்து வெயிட்டரை ”சீக்கிரம் கொண்டு வா” என்றேன்.

“ஏன் பக்கி மாதிரி ஆர்டர் பண்றே.யார் சாப்பிடுவா இத்தனையும்”

”பசிக்குதுன்ன!”

”ஐய்யோ! சகிக்கல”  என்றவள் வெயிட்டரை கூப்பிட்டு சிலவற்றை கேன்சல் செய்தாள்.

“இப்ப சொல்லு. என்ன திடீர்னு பூதம் மாதிரி வந்து நிக்கறே?”

”வீட்ல சண்டை அம்மா,அப்பாகிட்ட..அடிக்கடி வரும்.கோவிச்சுகிட்டு எங்கேயாவது பஸ்ல போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு போவேன்.இன்னைக்கு சிவன்மலை கோவிலுக்கு காலையிலேயே வந்துட்டேன்.படில உட்கார்ந்துட்டு இருந்தப்ப கீழே ஒரு கல்யாணப் பத்திரிக்கை கிடந்துச்சு.அதுல உன் பேர் இருந்துச்சா.சரி இந்த பையன் இத்தனை லெட்டர் போட்டுச்சே.போய் பார்க்கலாம்ன்னு கிளம்பி வந்துட்டேன்”

”அடிப்பாவி! அப்ப அந்த பத்திரிக்கைல வேற எவனாவது தெரிஞ்சவன் பேர் இருந்திருந்தா அங்க போயிருப்பியா?”

சொன்னதன் பிறகுதான் உளறியது உறைத்தது.

”அறைஞ்சுடுவேன். இந்த மாதிரி என்கிட்ட பேசாத”.

”சாரி..சாரி.”

இருவரது அலுவல், குடும்பம் என பேச ஆரம்பித்தோம்.

நல்ல பசி. சாப்பிட ஆரம்பித்தேன். அவளோ கொறித்துக் கொண்டிருந்தாள்.

”போதும்பா”

”ஏய்!அப்படியே இருக்கு.சாப்பிடு”

”இல்லைடா.பசிச்சது.ஆனா,சாப்பிட முடியலை. பசி போய்டுச்சு.சரி, உன் வீட்டுக்கு போலாமா. அம்மா,அப்பாவை எல்லாம் பார்க்கணும்”

”எல்லோரும் ஊர்ல..ரெண்டு நாளாகும் வர”

”ஓ! சரி வா கிளம்பலாம்”

”எங்க?”.

”நான் ஊருக்கு கிளம்பறேன்”

”இப்பத்தானே வந்தே..அதுக்குள்ள என்ன?”

”இல்லை பராவாயில்லை. ஜஸ்ட் பார்க்கணும்ன்னு தோணுச்சு.என்னை கொண்டு வந்து பஸ்ஸ்டாண்ட்ல விடு”

சரி பாதி கூட காலியாகாத அந்த உணவுக்கு பில் செட்டில் செய்து விட்டு, “வெங்கட்,பேக் பண்ணி பக்கத்துல காமாட்சியம்மன் கோவில் வாசல்ல யார்கிட்டயாவது  கொடுத்துடுங்க ப்ளீஸ்” என்றேன்.

”கோவில் வாசல்ல இருக்கிறவங்க சிக்கன் சாப்பிடுவாங்களா?”

”வெயில்ல, பட்டினில காஞ்சு போய் கிடக்கிறவங்களுக்கு காயும், கறியும் ஒண்ணுதான்”

”அய்யோடா! தெரியாம சொல்லிட்டேன்..நீ உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாத”

கிளம்பினோம்.பேருந்து நிலையம் நெருங்கியதும்,

”ரொம்ப பிஸியா நீ?”

”ஆமாம். ஏன்?”.

”சரி,பிஸியா இருந்தாலும் பரவாயில்லை..என்னை கொண்டு வந்து வெள்ளக்கோவில்ல பஸ் ஏத்தி விடு”.

”ஏய் லூஸா நீ.என்னா வெயிலு! எனக்கு வேற நிறைய வேலை இருக்கு”.

”நீதான் லூஸு.. சரி இங்கேயே விடு”

பேருந்து நிலையத்தின் உட்புகுந்து திருப்பூர் பேருந்து வரிசை அருகே சென்றவன்,  வண்டியை நிறுத்தாமல் அப்படியே வெளிவந்தேன்.

”ஏன்?”

”இல்லை. வா கொண்டு வந்து விடறேன்”.

அலுவலகத்தில் தொங்கலில் நிற்கும் பணிகள் நினைவில் அழுத்த, வேகமாக முறுக்கினேன்.

”இப்படியெல்லாம் வேகமா போறதா இருந்தா, நான் பஸ்லயே போய்க்கறேன்”.

”இம்சை உன்னோட.நங்குன்னு மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்து குதிச்சுட்டு நீ பண்ற வேலையும், பேசற பேச்சும்”.

 ஒரு மணி நேரம் கழித்து வெள்ளக்கோவிலை அடைந்தோம். வெள்ளக்கோவிலில் பேருந்து நிலையச் சாலையில் திரும்பாமல் மீண்டும் நேர் சாலையிலேயே பயணித்தேன்.

”ஏய்! இந்தப் பக்கம் போகணும்”.

”தெரியும்.காங்கேயத்துல ஏத்தி விடறேன்”.

”ஹே! ரொம்ப பொறுப்புப்பா! ஏன் உன் ஆபிஸ் இப்பவெல்லாம் உன்னைத் தேடாதா”

”போன் பண்ணி இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுத்துக்கறேன்”.

”ரொம்பத்தான் பிலிம் காட்டற நீ”

”நீ ஏன் பேச மாட்ட?”

ஓலப்பாளையம் அருகே அடர்ந்த புளியமரங்களின் கீழே நிதான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது  பைக்.

”ஏய் ஏய்.. நிறுத்து. புளியங்காய் சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு..அடிச்சுத்  தா”

” உன்னையெல்லாம் வீட்டுல சண்டை போடாம வைச்சு கொஞ்சுவாங்களா”

”நான் இப்படித்தான் இருப்பேன்..பிடிக்காதது எம்பிரச்னையில்ல்லை..அவங்கவங்க பிரச்னை”

சாலையோர வெள்ளை நிற சிமெண்ட் கட்டைகளில் அமர்ந்தோம். வாகான கல்லெடுத்து கொஞ்சம் புளியங்காய்களை அடித்து இறக்கினேன்..

”உனக்கு?”

”உவ்வே!.நமக்கு இதெல்லாம் செட்டாகாது”

சம்மணமிட்டு அமர்ந்து புளியங்காய்களை ஷாலில் சுற்றி, கட்டையில் கொட்டி உறிக்க தொடங்கினாள்.

”இப்படி மத்தியான வெயில்ல, ஊர்ல இருந்து ஐம்பது கிலோமீட்டர் தாண்டி, பொண்ணோட ரோட்டோரத்துல உட்கார்ந்து புளியங்காய் அடிப்பேன்னு யாராவது இன்னைக்கு காலையில என்கிட்ட சொல்லியிருந்தா போடா பைத்தியம்ன்னு சொல்லியிருப்பேன்”.

”ஏன் நான் கூடதான் இப்ப நினைச்சேன்.ட்ரெயின்ல போற புள்ளைங்களை ஊருக்கு ஒதுக்குப் புறமா உட்கார்ந்து சைட் அடிச்சுட்டு, எழுதறப்ப மட்டும் என்ன பில்டப்பு பாருன்னு. இப்ப என்னடான்னா புளியங்கா எல்லாம் அடிச்சு தர்ற!”

முறைத்தேன்.

காங்கேயம் வரைக்குமான அந்தப் பயணம் நீண்டு கொண்டேயிருந்தது. சலிக்காமல் பேசிக் கொண்டே வந்தாள். திருப்பூருக்கான மூன்று பேருந்துகள் உள் நுழைந்து வெளியேறி விட்டிருந்தது.”கூட்டம் அதிகமா இருக்கு”, ”இவன் டவுன் பஸ் மாதிரி போவான்”, ”இதுல சீட் சரியில்லை” என்று மூன்று பேருந்துகளும் இருவராலும் மாற்றி மாற்றி வழியனுப்பி வைக்கப் பட்டு, முடிவாய் நான்காவது பேருந்தில் ஏறிப் போய் விட்டாள்.

அவள் கொடுத்துச் சென்றிருந்த இல்லத்து தொலைபேசிக்கு இரவு அழைத்தேன்.

”ஹேப்பியா இருந்தேம்பா” என்றாள்.

”சண்டே வரட்டுமா, அங்க?”

”ம்க்கும்.வரப்ப பேசாத.அப்புறம் எதுக்கு மறுபடியும் பார்க்கணுமாம்”

”அது.. நீ திடீர்ன்னு வந்து நின்னியா.அதான்...”

”சரி.. சண்டே வா” என்று சிரித்தாள்..புழுங்கும் அந்த பொதுத் தொலைபேசி ஒற்றையறையில் நின்று மணிக்கணக்காக பேசிவிட்டு வெளிவந்த போது, சாலையோர உணவகங்கள் அடைக்கப் பட்டு கொண்டிருந்தன.

எப்பொழுதும் தவறாது கூடவே வரும் துரதிர்ஷடம் அவ்வாரமும் குத்துகாலிட்டு அருகில் வந்தமர்ந்தது. சனிக்கிழமை முடிக்க வேண்டிய வேலை சில புண்ணியாத்மாக்களால் முடிவில்லாமல் நீண்டதால், ஞாயிறு அலுவலகம் செல்லும்படியாகி விட்டது. சனிக்கிழமை இரவு அழைத்து அமிழ்ந்த குரலில் மெதுவாக சொன்னேன். பட்டென தொலைபேசி சாத்தப்பட்டது. திரும்ப திரும்ப அழைத்தும் அழைப்பு கதற விடப்பட்டது. அவள் மொட்டை மாடிக்கு போயிருப்பாள். பழகிப் போன மற்றுமொரு சபிக்கப் பட்ட தினம்!

அவ்வாரத்தில் எப்பொழுது அழைத்தாலும், குரல் கேட்டவுடனேயே பதில் இல்லாமல் தொலைபேசி அறைந்து சாத்தப்படும். அவளது கோபம் தந்த கோபம் போய் சிரிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு முறை தொலைபேசி அறையப்படும் போதும். அந்த புதிய விளையாட்டு பிடித்திருந்தது.அவளும் ஒவ்வொரு முறையும் புன்முறுவலுடனே தொலைபேசியை எரிந்திருக்க கூடும்.

அடுத்த ஞாயிறு மீண்டும் அழைத்தேன். பழகிய மெளனம்.

”வைச்சுடாத. உங்க ஊர் பஸ்ஸ்டாண்ட்லதான் நிக்கிறேன்”

”அய்யய்யோ! அறிவாளி சொல்லிட்டு வர மாட்டியா”

”எங்க சொல்ல விட்ட.போன் மாத்தி வேற வைச்சுட்டீங்களா இல்லை இன்னும் சுக்கு நூறா உடைஞ்ச அதே போன்தானா”

“கடிக்காத.என்னால இப்ப வர முடியாது.சான்ஸே இல்லை.பெரியம்மாவும், அக்காவும் வந்திருக்காங்க.விட்டுட்டு நகர முடியாது. இப்ப கோவிலுக்கு கிளம்பறோம்.நெக்ஸ்ட் வீக் பார்க்கலாமா.சாரி.சாரி..பட் தப்பு என்மேல இல்லை..உன்னை யாரு இப்ப நங்குன்னு வந்து நிக்க சொன்னது”

இப்பொழுது என் முறை. பதிலே சொல்லாமல் போனை அறைந்து சாத்தினேன். எதிரிலிருந்த டெலிபோன் பூத் அம்மையார் முறைத்தார்.


கானல் நீர்! - 1

பாழாய்ப் போன சங்கோஜம்தான்!. இரண்டு வருடத்தில் எண்ணி நான்கு தடவை கூட பேச விட்டதில்லை உள்ளே இருக்கும் கூச்ச சுபாவி. ஆனால்,பேசினால் கூட மகிழ்ந்திருப்பேனா எனத் தெரியவில்லை.இன்னவெல்லாம் பேச வேண்டும் என்ற கனவுகளே மிதப்பில் வைத்திருந்தது.

மூன்றாம் வருடத்தின் அந்திமக் காலங்களில் சின்னதாய் புன்னகை பரிமாறல்கள், அடாவடி நண்பர்கள் குழாம் அரட்டை அடிக்கும் போது, கூட நின்ற காரணத்தினால் சின்ன சின்ன விசாரிப்புகள் (”ஏம்பா, எப்ப பார்த்தாலும் திருநீர் பட்டை அடிச்சுட்டு வர?”, “ஹாப் ஹேண்ட் சர்ட் போட மாட்டியா? உனக்கு நல்லா இருக்கும்பா”). அவ்வளவுதான்!..கடைசி நாட்களின் ஆட்டோ கிராஃப் சம்பிரதாயங்களில், உன்னிடமும் அந்த டைரியை நீட்ட, இரண்டு பக்கத்துக்கு எழுதியிருந்தாய்.ஏதோ ஒரு கவிதையில் ஆரம்பித்து.

”ஏன் நீ எப்பொழுதும் எங்களுடன் பேசியதேயில்லை. எங்கள் எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்.அடாவடிக் கும்பலுடன் சுற்றி வந்தாலும், நீ அவர்களில் ஒருவன் இல்லை என்பது நன்றாக தெரியும்.ஏனோ எனக்கு உன்னிடம் ஒரு செண்டிமெண்ட். டெஸ்ட் பேப்பர்ஸ் வாங்கும் போதெல்லாம் உன்னை பார்த்து விட்டு வாங்குவேன்.ரிசல்ட் நன்றாக இருக்கும்.கிட்டதட்ட மூன்று செமஸ்டராக உன்னை பார்த்த பின்தான் டெஸ்ட் பேப்பர் எழுந்து சென்று வாங்குவேன்.நீ ஏன் பேசியதில்லை என்பது தெரியாது.ஆனால்,என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்ல நண்பர்களே.பேசாத உன்னையும் சேர்த்து.கண்டிப்பாக பைனல் ரிஸல்ட் பார்க்குமன்று வந்து விடு.உன்னை பார்த்த பின்புதான் ரிசல்ட் பார்க்க செல்வேன்” என்று இன்னும் என்னென்னவோ எழுதியிருந்தாய்..

மூன்று வருடங்களை வீணடித்து விட்டதாய் கழிவிரக்கம் வந்து சூழ்ந்தது அந்த ஆட்டோகிராஃபை படித்த கணத்தில்.கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே பணியில் அமர்ந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வெளியிட்ட நாளன்று அலுவலகத்தில் ஆகப் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டேன். மாலை நான்கு மணிக்கு அடித்து பிடித்து, அந்த டிவிஎஸ் 50 வண்டியை கதறக் கதற முறுக்கி கல்லூரியில் கொண்டு வந்து நிறுத்திய போது, நாலைந்து நண்பர்களே இருந்தனர். ஜேம்ஸ் சொன்னான்.”மாப்ளே, எல்லோரும் இப்பதாண்டா 3.45 சதாஸ்ல ஏறிப் போனாங்க. சத்யா கூட உன்னை தேடிகிட்டு இருந்தாடா”.போர்டிகோவில் இருந்து அப்படியே திரும்பியவன், நேராக பேருந்து நிலையம் வந்து திருப்பூர் செல்லும் அனைத்து பேருந்துகளில் ஏறி இறங்கியும், உன்னை பார்க்க முடியவில்லை.என்னை நானே முழுமனதாக வெறுத்த தினம் அது.

இன்னுமொரு இரண்டு,மூன்று மாதங்கள் ஓடியது. தனிமை நடைபிணமாக்கியது. விடுமுறைகளற்ற வாழ்க்கை.விடுபட விரும்பா வாழ்க்கை. ஞாயிறு மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி அப்படியே கண்வழி தோன்றும் சாலைகளில் சென்று கொண்டிருப்பேன். ஊரின் ஒதுக்குப் புறத்தில் ரயில்வே தண்டாவளங்களை ஒட்டிக் கிடந்த பாறைகளில் இரவு ஏழுமணிக்கும் வெயிலின் வெதுவெதுப்பு ஊறிக் கொண்டிருக்கும். அதில் படுத்து வெயிலை என்மீது வாங்கி சிகரெட் புகைப்பதென்பது அப்போதைய வாராந்திர வாடிக்கையாகி விட்டிருந்தது.

அப்படியான பொழுதொன்றில் சட்டென தோன்றவே, வண்டியில் வைத்திருந்த அலுவலக ஏடொன்றை எடுத்து, சரசரவென எழுத ஆரம்பித்தேன்.இப்பொழுது தெளிவாக நினைவில் இல்லை.ஆனால்,அக்கணத்து சஞ்சலத்தினை தெளிவாக எழுத்தில் இறக்கிய நினைவிருக்கிறது.

தனிமை,தனிமை,தனிமை எனக் கரைந்த அப்பொழுதுகளை எழுத்தில் இறக்கினேன்.இரண்டு நாட்களாக என்னுடனேயே வைத்திருந்த அக்கடிதத்தை கடைசியில் அஞ்சலும் செய்தேன். இரண்டு வாரங்கள் ஓடியும் பதில் இல்லை. பதிலின்மை பெரிய ஏமாற்றத்தை தரவில்லை.ஒரு வழிப்பாதை பயணமே போதுமென இருந்த நாட்களது. மூன்றாவது வாரம் மீண்டும் ஒரு கடிதம்.அதே இடம்.அதே ஏட்டில் இருந்து கிழித்த தாள்.என் முன் கரைந்து கொண்டிருந்த காகம், என்னைக் கடந்த புகைவண்டி, அதில் தெரிந்த சன்னலோர சினேகிதிகள் தந்த ஆசுவாசம் என அப்பொழுதைய என் சுற்றம் எல்லாவற்றையும் கடிதத்தில் நிறைத்தேன்.என்னையும், என் சுற்றத்தையும், அது எனக்குள் ஏற்படுத்தும் சஞ்சலங்களையும் கடிதம் வழி உன்னிடம் கடத்துகிறேன் என்பதே என்னை அப்பொழுது இலகுவாக்கியது.உற்சாகமாக வழிநடத்தியது. சுகமாக போய்க் கொண்டிருந்த ஒரு வழிப் பயணத்தை, ஒரு மதிய நேரத்தில் உன்னிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் வாயிலாக நிறுத்தினாய்.

-தொடரும்

கானல் நீர்! - 2