Wednesday, June 08, 2011

நான் plain married!!

நேற்றைய முன்தின இரவு எனக்கும் எனது மகளுக்குமான உரையாடல்.

------------xxxx--------xxxx---------xxxx-----------

செல்லம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நாளைக்கு wedding day டா.. மார்னிங் தூங்கி எழுந்தவுடனே, அம்மாவுக்கு surprise wish பண்றீங்களா?

ok ப்பா.. உங்களுக்கு marriage ஆகி எவ்வளவு days ஆகுதுப்பா?

இன்னியோட 7 years complete ஆகிடுச்சு செல்லம்..

(அருகே காதருகில் வந்து), உங்களுக்கு plain marriage-ஆ இல்லை love marriage-ஆ ப்பா!

(நான் புன்முறுவலுடன்) plain marriage-னா என்ன, love marriage-னா என்னடா செல்லம்?

அப்பா, உங்களுக்கு இது கூடத் தெரியாதா?

இல்லைடா, please சொல்லுங்க!!

அது வந்துப்பா, ரெண்டு பேரும் love பண்ணி marriage பண்ணா love marriage.. love பண்ணாம marriage பண்ணா அது plain marriage ப்பா..நிஜமா உங்களுக்கு தெரியாதாப்பா?

இல்லைடா எனக்கு இப்பத்தான் தெரியும்..அப்பாவுக்கு plain marriage தாண்டா..

ok ok

செல்லம்..இந்த் plain marriage புரியுது..love marriage புரியலையே..love-னா என்னடா?

புரியலையாப்பா!! சரி..இருங்க சொல்றேன்..அது வந்துப்பா, ரெண்டு பேரு friends ஆகி rose கொடுத்துகிட்டா அதான் love-ப்பா..

oh..ok ok.எப்படிடா செல்லம் இதெல்லாம் உங்களுக்கு தெரியும்..

நான் இப்ப first standard போறேன்ப்பா..அதான், எனக்கு எல்லாம் தெரியும்..TV-ல பார்த்தேன்ப்பா..நீங்க எப்படிப்பா இதெல்லாம் தெரியாம office போறீங்க !!!

சரி..love எப்படா செல்லம் எல்லோருக்கும் வரும்?

அதுவாப்பா..அது வந்து college படிக்கிறப்ப வரும்..இல்லைன்னா உங்களை மாதிரி big ஆனா வரும்ப்பா..

Ok ok..நீ ரொம்ப intelligent-டா!!

-----xxxxxxx--------xxxxxxxxx---------xxxxxxxx------xxxxxxxxx------

இதற்க்கு மேல் இந்த உரையாடல் நீள்வது உசிதமாக படாத்தால், topic மாற்றி விட்டேன் :)

Wednesday, December 29, 2010

மனுஷ்ய புத்திரனின் மழைநாள்!!

சோம்பலான மழையும், சில்லிப்பான மதியமுமான இந்த நேரத்தில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்த இந்த மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதையை தேடி எடுத்தேன்.. எப்பொழுதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த கவிதை நினைவுக்கு வந்து விடும்.......

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

- மனுஷ்ய புத்திரன்

Tuesday, December 28, 2010

சிதம்பர நினைவுகள் - லெளகீக வாழ்வின் யதார்த்தங்கள்!!


சிதம்பர நினைவுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய இரவில் நேரமும்,மனமும் ஒத்திசைய புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருந்த போது, சிதம்பர நினைவுகள் கிடைத்தது.. முதல் முறை படித்தபோது ஒரே மூச்சில் படித்த நூல் இது.. மிகவும் பிடித்த நூல்களில் இதுவும் ஒன்று.. நேற்று மீள்வாசிப்பு செய்த போதும் நிறைவாக இருந்தது..

கே.வி.சைலஜா அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப் பட்ட, கேரளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சிதம்பர நினைவுகள்”.. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு, நம்மை பாலச்சந்திரனுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்கிறது.. பாலச்சந்திரன், அவரின் வாழ்க்கை பக்கங்களை திறந்த புத்தகமாக வாசகனுக்கு படிக்க கொடுக்கிறார்..எத்தனை எத்தனை சம்பவங்கள், மாந்தர்கள்.. அத்தனையும் நீண்ட காலம் ஒவ்வொரு வாசகன் மனதிலும் நிற்கும்..

ஓரளவு சமூக அடையாளம் பெற்ற பிறகு அந்த நிலையை பாதுகாக்க நிறைய அகம் மற்றும் புறம் சார்ந்த ஒப்பனைகளிலேயே நாம் வாழ்வை கடத்தி விடுகிறோம்.. எல்லா அறிவுஜீவிகளை போலவே,பாலச்சந்திரன் அதை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை அப்படியே வாசகனுக்கும் இந்த புத்தகத்தின் வாயிலாக கடத்தி இருக்கிறார்..

பாலச்சந்திரனை வறுமையும்,பசியும் பெரும்பாலும் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகிறது.. பரத்தையுடனான பெளர்ணமி இரவும், மருத்துவமனை வாரண்டாவில் வாடும் ஏழைக்கவிஞன் மனைவியின் வைராக்கியமும், திருவோண திண்ணை விருந்தும், விஜயலட்சுமியிடம் கருக்கலைப்புக்காக வாதாடும் போது வன்முறையை பிரயோகிக்கும் கையலாகத்தனமும், விற்பனை பிரதிநிதியின் இடை தடவலுக்கு பின்னான தவிப்பும், ராதிகாவின் மேலிருந்த மோகம் கலந்த பயமும்,அம்மாவுக்கு உதவ முடியா அவலமும் மற்றும் இன்னும் பல சம்பவங்களும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

எல்லா கட்டுரைகளிலும் என்னால் முழுமனதுடன் ஒன்ற முடிந்தது ஒன்றே ஒன்றை தவிர.. அது, ”மகாநடிகன் ”என்னும் நமது செவாலியேவுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு பற்றியது..அதீதமான உணர்ச்சிப் பெருக்குடன் எழுதப்பட்டது போலிருந்தது..

நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வி என்று எடைபோடாமல், வாழ்வின் கணங்களை அப்படியே அனுபவிக்க சொல்கின்றன கட்டுரைகள்..பாலச்சந்திரனின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்,

“வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது வாழ்க்கை”

Friday, December 03, 2010

கடவுளின் தேசம்!!

இரண்டு வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் ஒரு அருமையான உல்லாசப் பயணம் திட்டமிட்டோம்.நான் ஏற்கனவே தனியாக ஒரு முறை இங்கே சென்று வந்திருந்தாலும், அலுவலக நண்பர்களுக்கு அந்த மறக்க முடியாத அனுபவத்தை தர எண்ணி மீண்டும் ஒரு பயணம்..

கொல்லம் முதல் ஆலப்புழா வரையிலான 75 கி.மீ தூரத்தை பிரத்யேக படகில் கடக்கும் பயணம்தான் அது.மொத்தம் பதினைந்து பேர் ஒரு அழகான ஓடத்தில் ஒரு நாள் முழுவதையும் ஏகாந்தமாக செலவிட்டோம்.. போத்தல் + சீட்டாட்டம் + மீன் சாப்பாடு + எங்கெங்கு காணிணும் பச்சை என கொண்டாட்டமான என்றென்றும் மனதிலிருக்கும் நாளது.. பயணத்தின் சில புகைப்படங்களை இங்கே பதிந்து வைக்கிறேன்..


ரதம் தயார்..





வழியெங்கும் தனித்தீவு வீடுகள்




போட் ஸ்டாப்!!



மதிய உணவு தயராகிறது



தனியே தன்னந்தனியே!!



மாலை கருக்கலில்..



ஊர்க்காவலன்!!




அமைதியான நதியினிலே ஓடம்!




கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் அனுபவிக்க வேண்டிய பயணம்..

Saturday, November 27, 2010

நந்தலாலா - ஒரு மழைநாளின் இரவில் !

அசோகமித்திரன்,வண்ணதாசன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகளில் கிடைக்கும் வாசிப்பனுபவமும்,தர்க்க சிந்தனையயும், திரையில் கொடுக்க முடியாதா என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு கிடைத்துள்ள பதில்தான் “நந்தலாலா”..

வார்த்தைகளால் அல்லாமல் காட்சிகளால் ரசிகனுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை மிஷ்கினும், மகேஷ் முத்துசாமியும் அளித்துள்ளனர்..

மிஷ்கின் பட டைட்டில் கார்டு எப்போதும் தனித்து இருக்கும்.. நந்தலாலாவிலும் அப்படியே.. தண்ணீருடன் ஊடாடும் அந்த செடிகள் தரும் புத்துணர்ச்சிக்காகவே கண்டிப்பாக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும்..

மகேஷ் முத்துசாமி அஞ்சாதேவில் முதற் காட்சி வானத்தை நோக்கி கேமராவை வைத்து இருப்பார்..அங்கே நிமிர்ந்து உட்காரும் நாம் கடைசி காட்சி வரை படத்துடன் ஒன்றி இருப்போம்.. நந்தலாலாவிலும், டைட்டில் கார்டும் அதனை தொடர்ந்த சிறுவன் அகியின் கவிழ்ந்த முகத்தில் ஆரம்பமாகும் நீளமான அந்த முதல் ஷாட்டும் நம்மை ஒரு புதிய அனுபவத்திற்கு தயார் செய்கின்றன( மிஷ்கினின் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலான காட்சிகளில் தலை குனிந்தே பேசுகின்றனர் ..சித்திரம் பேசுதடி,அஞ்சாதேவில், நரேன்..இப்பொழுது நந்தலாலாவில் அகியும்,மிஷ்கினும்..இதன் பின் உள்ள குறிப்பென்ன? )

சிறுவன் அகியும், மனநலம் பாதிக்கப்பட்ட மிஷ்கினும் ஒரு தருணத்தில் இணைந்து அவரவர் தாயைத் தேடி செல்லும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் மற்றும் அனுபவங்களே நந்தலாலா.. ஒரு ரசிகனுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் நந்தலாலா படைக்கப்பட்டிருக்கிறது..

எனக்கு தெரிந்து காட்சியமைப்புகளுக்காக ஒரு இயக்குனர் தொடந்து கைதட்டல் வாங்கியதை அஞ்சாதேவில் முதன்முதலில் பல காட்சிகளில் பார்த்தேன்..நந்தலாலாவிலும் இது தொடர்கிறது...அதே போல் படம் முடிந்தபின் அனைத்து வகுப்பு ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி விட்டு வெளிவருவதை நான் பார்த்ததும் நந்தலாலாவில்தான்..

மிகவும் ரசித்த விசயங்கள் :

- காட்சியமைப்புகள் மற்றும் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹைக்கூ போல எழுதப்பட்ட திரைக்கதை. கதாபாத்திரத்தின் முகத்தில் ஷாட் ஓப்பன் செய்து அந்த முகத்தின் அதிர்ச்சியினை ரசிகனுக்கு கடத்தி விட்டு அதன்பின் அந்த காட்சியை விளக்குதல்..ஒரு கட்டத்தில் இந்த உத்தியே திரும்ப திரும்ப வந்தாலும் அலுப்பை தரவில்லை.

-லொகேஷன் தேர்வுகளும், மகேஷ் முத்துசாமியின் மனதை அள்ளும்/பாதிக்கும் கேமிரா கோணங்களும்.... இது போன்ற திரைக்கதைக்கு கேமிரா கோணங்கள் படத்தை தாங்கி செல்ல உதவுகிறது..

- இளையராஜாவின் ஆளுமை..வழக்கம் போல தேவையற்ற இடங்களில் இசையின்றி செய்து, தேவையான இடங்களில் வருடி கொடுக்கிறார்.. அந்த டிராக்டர் பயணம் ஆரம்பமானதும் ஒலிக்கும் இளையராஜா குரலுக்கு ஏக கரகோஷம்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும், பட்டென மனதில் தோன்றுபவை மேற்சொன்னவை..

தவிர்த்திருக்க வேண்டியவை :

- மிஷ்கின் அம்மாவை பார்த்தவுடன் காட்டும் எதிர்வினை அவரது கதாபாத்திரத்திலிருந்து முரண்படுவதாக எனக்கு தோன்றுகிறது..

- ஸ்நிக்தா பாலத்திற்கு அடியில் உட்கார்ந்து பேசும் கிளிஷே வசனம் ( ஆனால் அந்த வசனம் முடிந்தவுடன் காட்டப்படும் இரண்டு குண்டர்கள்,மிஷ்கின் மற்றும் சிறுவன் உட்கார்ந்திருக்கும் ஷாட் நிச்சயம் உலகத்தரமான ஒன்று)

- கடைசி காட்சியில் மிஷ்கினை(பலூனுடன்)முதிர்ச்சியாக காட்டுவது..

மற்றபடி ஏதும் குறையில்லை..

ஒரு மழைநாளின் சில்லிட்ட இரவில் எனக்கு நந்தலாலா தந்த இந்த அனுபவமும்,மனநிறைவும் நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும்.