Tuesday, December 28, 2010

சிதம்பர நினைவுகள் - லெளகீக வாழ்வின் யதார்த்தங்கள்!!


சிதம்பர நினைவுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றைய இரவில் நேரமும்,மனமும் ஒத்திசைய புத்தக அலமாரியில் தேடிக் கொண்டிருந்த போது, சிதம்பர நினைவுகள் கிடைத்தது.. முதல் முறை படித்தபோது ஒரே மூச்சில் படித்த நூல் இது.. மிகவும் பிடித்த நூல்களில் இதுவும் ஒன்று.. நேற்று மீள்வாசிப்பு செய்த போதும் நிறைவாக இருந்தது..

கே.வி.சைலஜா அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப் பட்ட, கேரளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “சிதம்பர நினைவுகள்”.. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு, நம்மை பாலச்சந்திரனுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்கிறது.. பாலச்சந்திரன், அவரின் வாழ்க்கை பக்கங்களை திறந்த புத்தகமாக வாசகனுக்கு படிக்க கொடுக்கிறார்..எத்தனை எத்தனை சம்பவங்கள், மாந்தர்கள்.. அத்தனையும் நீண்ட காலம் ஒவ்வொரு வாசகன் மனதிலும் நிற்கும்..

ஓரளவு சமூக அடையாளம் பெற்ற பிறகு அந்த நிலையை பாதுகாக்க நிறைய அகம் மற்றும் புறம் சார்ந்த ஒப்பனைகளிலேயே நாம் வாழ்வை கடத்தி விடுகிறோம்.. எல்லா அறிவுஜீவிகளை போலவே,பாலச்சந்திரன் அதை பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை அப்படியே வாசகனுக்கும் இந்த புத்தகத்தின் வாயிலாக கடத்தி இருக்கிறார்..

பாலச்சந்திரனை வறுமையும்,பசியும் பெரும்பாலும் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதை கட்டுரைகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகிறது.. பரத்தையுடனான பெளர்ணமி இரவும், மருத்துவமனை வாரண்டாவில் வாடும் ஏழைக்கவிஞன் மனைவியின் வைராக்கியமும், திருவோண திண்ணை விருந்தும், விஜயலட்சுமியிடம் கருக்கலைப்புக்காக வாதாடும் போது வன்முறையை பிரயோகிக்கும் கையலாகத்தனமும், விற்பனை பிரதிநிதியின் இடை தடவலுக்கு பின்னான தவிப்பும், ராதிகாவின் மேலிருந்த மோகம் கலந்த பயமும்,அம்மாவுக்கு உதவ முடியா அவலமும் மற்றும் இன்னும் பல சம்பவங்களும் மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..

எல்லா கட்டுரைகளிலும் என்னால் முழுமனதுடன் ஒன்ற முடிந்தது ஒன்றே ஒன்றை தவிர.. அது, ”மகாநடிகன் ”என்னும் நமது செவாலியேவுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு பற்றியது..அதீதமான உணர்ச்சிப் பெருக்குடன் எழுதப்பட்டது போலிருந்தது..

நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வி என்று எடைபோடாமல், வாழ்வின் கணங்களை அப்படியே அனுபவிக்க சொல்கின்றன கட்டுரைகள்..பாலச்சந்திரனின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்,

“வாழ்ந்து மட்டுமே கற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது வாழ்க்கை”

2 comments:

பா.ராஜாராம் said...

அறிமுகத்திற்கு நன்றி ராதாகிருஷ்ணன்!

பகிர்விற்கும்.

ராகின் said...

அன்பின் பா.ரா,

ஐந்து வருடங்களாக பதிவுலகையும், சுமார் ஒரு வருடத்திற்க்கு மேலாக உங்களையும் தொடர்கிறேன்.. உங்களை போல் உயிர் உருக்கும் எழுத்தை யாரிடமும் கண்டதில்லை.. நேற்றிரவு சுமார் நான்கு மணி நேரம் ”கருவேலநிழலில்” தான் இளைப்பாறி கொண்டிருந்தேன்.. மிகுந்த நெகிழ்வான அனுபவம்.. நன்றிகள் பல..

Post a Comment