Monday, February 25, 2013

பாடப் படாதவன்!


தோனி ஒத்தகையில ஆட்டத்தை நம்ம பக்கம் நேத்து கொண்டு வந்தப்பதான் ”அவரை” பத்தி ஞாபகம் வந்தது..எத்தனை ஆட்டங்களை கடைசிவரை உயிரைக் கொடுத்து கொண்டு சென்றிருக்கிறார். இடைநிலை ஆட்டகாரர்களின் வெற்றி ஓட்டங்கள் என்றுமே சிலாகிக்கப் படுவது..இந்த மாதிரியான ஓட்டங்களை பெற வேண்டுமெனில் கொஞ்சம் நிறைய நேரம் ஆடக்கிடைக்க வேண்டும்..அப்படி நிறைய நேரம் கிடைக்கிறதென்றாலே, அவருக்கு முன்னே களமிறங்கிய முதல்வரிசை ஆட்டக்காரர்கள் சொதப்பி விட்டார்கள் என்பது திண்ணம்..அப்படி குறைந்த ஓட்டங்களில் அனைத்து முதல் வரிசை ஆட்டக்காரர்களும் கூட்டுக்கு திரும்பியவுடன் களமிறங்கும் ஆட்டக்காரருக்கு இருக்கும் மனஅழுத்தம் மிக அதிகம்.. அப்படிப் பட்ட அழுத்தத்துடன் இந்த மாதிரியான சாதனை ஆட்டங்களை வெளிப்படுத்தும் இடைநிலை ஆட்டக் காரர்கள் மிகப் பாராட்டுக்குரியவர்கள்..

1997-1999 வரையிலான காலகட்டத்தில் அப்படி ஒரு ஆபத்பாந்தவனாக நமக்கு ஒரு நாள் ஆட்டங்களில் கிடைத்தவர்தான் ”அவர்”...அப்பொழுதெல்லாம், தெண்டுல்கரின் ஆட்டம் முடிந்தவுடனே தொலைக்காட்சியை அணைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மையானவர்களுக்கு மத்தியில், தான் களத்திலிருக்கும் வரை ஆட்டம் முடியாது என தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒரு சிறுபான்மை ரசிகப் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருந்தார்.. மேல்வரிசை அனைத்தும் களத்தை காலி செய்த பின் களமிறங்கி வால்களை துணைக்கு வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் அவரை பார்க்கும் போதெல்லாம் உற்சாகத்தை விட பரிதாபம்தான் மேலோங்கி இருக்கும்..

அப்பொழுது, கவுந்தப் பாடியில் ஒரு பத்து நாள் தங்கியிருந்தேன்.. டேபிள் மேட் நெசவு செய்யும் கைத்தறிகளை மட்டுமே முழுவதும் கொண்ட ஊர்.. கிட்டதட்ட பத்திருபது கிராமங்கள் கவுந்தப் பாடியை சுற்றி..அனைத்துக்கும் முதன்மையான தொழில் நெசவுதான்..பத்துக்கு இருபதடி வீட்டில், எட்டுக்கு எட்டு தறி அடைத்துக் கொண்டு மீதியுள்ள இடத்தில்தான் சமையல், தூக்கம், தொலைக்காட்சி இன்ன பிற..தினமும் மாலையில் தறி தறியாக சென்று அன்று முழுவதும் நெசவான டேபிள் மேட்களை வசூல் செய்து அன்றிரவு பேருந்தில் ஊருக்கு பார்சல் அனுப்புவேன்..தறி ஒன்றுக்கு தினமும் 24 டேபிள் மேட்கள் ஒழுங்காக உட்கார்ந்து நெய்தால் உற்பத்தியாகும்.. மேட்டுப் பாளையம் என்றொரு பகுதியுண்டு..தெருவுக்கு நூறு தறியுள்ள ஊர்.. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய தெருக்கள்..மாலையில் அந்த ஊரில்தான் கடைசியாக வசூல் செய்வேன்..நாளொன்றுக்கு 2000 முதல் 2400 மேட்களை வசூல் செய்வேன்..தினமும் மதியமே அலுவலத்துக்கு தகவல் சொல்லியாக வேண்டும் அன்று மொத்தம் எவ்வளவு சரக்கு அனுப்ப முடியுமென..மொத்த நெசவில் இருக்கும் தறிகளை கணக்கில் கொண்டு தறிக்கு 20 மேட்கள் எனக் கணக்கு போட்டு முன்கூட்டியே சொல்லிவிடுவேன்.. 50-100 மேட்கள் முன்னே பின்னே சென்றால் பிரச்னையில்லை.. நிறைய துண்டு விழுந்தால் ரணகளம்தான்..நான் கொடுக்கும் கணக்கை வைத்து அடுத்த நாள் போகும் ஷிப்மண்ட்க்கு பேக்கிங் ஸ்லிப் தயார் செய்து பாம்பேக்கு ஃபேக்ஸ் அனுப்பி விடுவார்கள்..அடுத்த நாள் அந்தளவு பெட்டி சென்னைக்கு வண்டியேற்ற வேண்டும்.. அப்படியொரு நாள், கணக்கை கொடுத்து விட்டு, ஊர் ஊராக சென்று மேட்களை வசூல் செய்து கொண்டிருந்தேன்..ஓரளவு எதிர்பார்த்த அளவு எல்லா இடத்திலிருந்தும் சரக்கை எடுத்துக் கொண்டிருந்தேன்.. கடைசியாக மேட்டுப் பாளையம்..அங்குதான் ஒரு 40 தறிகள்..வீடு வீடாக சென்று பார்க்கிறேன்..பெரும்பான்மையான வீட்டில் தறியில் ஆளில்லை.. 24 மேட்கள் ஆக வேண்டிய இடத்தில் பத்து முதல் பதினைந்து மேட்களே ஆகியிருந்தன..அதுவும் தறியிலேயே உள்ளது..அறுத்து சுத்தம் செய்யப் படவில்லை..பகீரென்றது.. கடைசியாக ஒரு தறியில் சென்று பார்த்தால் எல்லா பயலும் அங்கே கிடைத்த சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு இந்தியா- தென்னாப்ரிக்கா ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.. செம காண்டாகி, காட்டுக் கத்தல் கத்தி தொலைக்காட்சியை அணைத்து விட்டேன்..ஒரே கூச்சல், களேபரம்.. அதுவரை நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா சதத்திற்க்கு நெருக்கமாக வந்து அப்போதுதான் ஆட்டமிழந்திருந்தார்.. ”அவ்ளோதான்யா, ஆட்டம் முடிந்து விட்டது..போய் பிழைப்பை பாருங்கள்” என்றேன்..அப்பதான் ஒரு பொடியன் சொன்னான்..”சார், நம்ம ஹீரோ உள்ளே இருக்க வரை ஆட்டம் முடியாது சார்..மேட்ச் பார்க்க விடு.நம்ம ஜெயிக்கிறோம்..அதே குஷில வந்து உட்கார்ந்து உனக்கு இன்னிக்கு வசூலாக வேண்டிய மேட் எல்லாம் நெஸ்சு தரோம் சார்” அப்படின்னான்.. ”நீ சொன்னா பத்தாதுடா, எல்லோரையும் சொல்ல சொல்லுன்னேன்”..கோரஸா ஒத்துக்கிட்டாங்க..அவனுங்ககிட்ட இருந்த பீடியை வாங்கி வலிச்சுகிட்டே கயித்து கட்டில்ல உட்கார்ந்து வேற வழியில்லாம ஆட்டத்தை நானும் தொடர்ந்தேன்..

நம்ம கதாநாயகர் கடைசி ரெண்டு விக்கெட்காரனுங்களை கூட வைச்சுக்கிட்டு குரோனியேவுக்கும்,போல்லாக்குக்கும் செமையா தண்ணி காட்டி கடைசி ஒரு பந்து மிச்சமிருக்கிறப்போ அந்த 300 ரன்னை சேஸ் பண்ணி ஜெயிக்க வைச்சார்.. அப்படி ஒரு சந்தோசம் பய புள்ளைகளுக்கு..நெசவாகலைங்கற கடுப்புல இருந்த நான் எப்ப அந்த ஆட்டத்துக்குள்ளே முழுகினேன்னு எனக்கே தெரியலை..வின்னிங் ஷாட் அடிச்ச உடனே பக்கத்துல இருந்த பசங்களை கட்டிப் புடிச்சுட்டேன்..”என்னா மாதிரி ஆட்டம் பாத்த இல்ல சார்..எப்ப சார் கிடைக்கும் இந்த மாதிரி ஒரு மேட்ச்..ஷிப்மண்ட் தெனமும்தான் போகுது” அப்படின்னு நம்மளையே நக்கல் விட்டானுங்க..ஒரு வழியா கொண்டாடி முடிச்சு எல்லா பயலும் தறிக்குள்ள பூந்தானுங்க.. ”சார், நைட் எல்லாத்துக்கு புரோட்டா வாங்கிட்டு வந்துடு. எந்நேரம் ஆனாலும் உன் மேட்டை நெஸ்சு கைல குடுக்காம படுக்க மாட்டோம்”னு சொல்லிட்டு நெய்ய ஆரம்பிச்சானுங்க.. அதுவரைக்கும் வசூலான மேட் அனைத்தையும் பார்சல் பண்ணி பேருந்தில் வைத்து விட்டு அலுவலகத்துக்கு தகவல் சொன்னால், என்னய்யா 300 மேட் குறையுதுன்னு கதற ஆரம்பிச்சுடானுங்க..”இல்லை சார், ஒரு தெருவுல எழவு விழுந்துடுச்சு.அங்கேதான் நிறைய தறியிருக்குது..எவ்ளோ ஆகியிருக்குன்னு தெரியலை.காலைலதான் சொல்ல முடியும்”னு சொல்லிட்டு செம ஏத்து வாங்கினேன்.. நம்பிக்கையே இல்லாம எல்லா பயலுக்கும் புரோட்டா வாங்கிட்டு போறேன்..

வழக்கமா ஏழு,எட்டு மணிக்கெல்லாம் தறியை விட்டு இறங்கிடுவாங்க..ஒன்பது மணிக்கு ஊரே அமைதியாகிடும்..நான் போனப்ப ஒரு ஒன்பது மணி இருக்கும்..தெருவுக்குள்ளே நுழையறேன், டக் டக் டக் டக்-னு கைத்தறில ஊடை வாட்டு போட்டு நெசவு செய்ற பத்து-பதினைந்து தறிக்கான கோரஸ் சத்தம்..அப்படியே கண்ணுல கர கரன்னு தண்ணி வந்துடுச்சு.. இரண்டு மணி நேரத்துக்கும் மேல சுத்தி சுத்தி வந்து எல்லா பயலுககிட்டேயும் பேச்சு கொடுத்துட்டே இருந்தேன்.. இரவு ஒரு பன்னிரெண்டு மணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேட் வசூலாச்சு..எல்லாத்துக்கும் ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு, பார்சலை இரு சக்கர வண்டியில் வைத்து எடுத்துக் கொண்டு 30 கி.மீ பயணம் செய்து ஈரோடு வந்து பேருந்தில் வைத்து விட்டு, ஊருக்கு தகவல் கொடுத்ததுட்டு ஒரு தம்மை இழுத்தப்பதான் மூச்சே வந்தது..

காலையில் எழுந்து தினசரி பார்த்தேன்.. ஆட்டத்தை வென்ற செய்தியுடன் ராபின் சிங்கின் படம்.. முன்னிரவின் நிகழ்வுகள் மனதில் ஓட, சொல்லிக் கொண்டேன் “ஹீரோடா நீ” .

No comments:

Post a Comment