Monday, August 26, 2013

முதல் குடி!

 
டிப்ளமோ இரண்டாவது வருடம். நட்பினால் சூழப்பட்ட பதின்ம வயது.சந்தோஷத்தின் உச்சியில் ஆட்டமும் பாட்டமுமாக கழிந்த நாட்கள்..அப்போதைய நெருங்கிய நண்பன் ஈரோடு பக்கமுள்ள கிராமத்தில் இருந்து வருவான்.அவனது கிராமத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும்  விழா..எல்லோரும் கண்டிப்பா வரணும் மாப்ளே என்று கூட்டிக் கொண்டு சென்று விட்டான்..அவனது உள்ளூர் நண்பர்கள் தயராக வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள்.  மஞ்சள் வயல்களின் ஊடே ரயில்வே கிராஸிங் தாண்டி அவனது கிராமம் சென்றோம்..வீட்டில் அவனது அப்பா,அம்மா மற்றும் தங்கை எல்லோருமே எனக்காக ஆர்வமாக காத்திருந்தார்கள்..பய புள்ள எந்நேரமும் நம்ம புராணத்தையே வீட்டுல ரெண்டு வருசமா சொல்லிட்டு இருந்து இருக்கான்..பெரும்பாலும் என் சாப்பாட்டைதான் சாப்பிடுவான்..அவனுடைய சாப்பாட்டை யாருக்காவது கொடுத்து விடுவான்..இந்த மாதிரி நிறைய.

ரொம்ப கவனிப்பு வீட்டுல.அவங்கப்பா வாத்தியார். ரொம்பவே சோஷியல்.  நாத்திகவாதி..வில்ஸ் சிகரெட் புகைப்பார்..”கண்ணு தம்மு ஏதாவது வேணுமா?”ன்னு முதல் சந்திப்புலயே அதிரடிச்சார்..எனக்கு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச பத்தாவது நிமிசத்துலயே, என் வீட்டை விட ரொம்ப பிடிச்சு போச்சு..பேசிக்கிட்டு இருக்கப்பயே அவனோட நண்பர்கள் கோழியை உறிச்சு கொண்டு வந்து வீட்டுல கொடுத்துட்டு, சிக்னல் கொடுத்தானுங்க..அப்படியே என்னை நகர்த்தி வண்டில உட்கார வைச்சு ஊர்வலம் கூப்பிட்டு போய், வரப்போரமா நடக்க வைச்சு, ஒரு பம்ப்செட் ரூம்ல உட்கார வைச்சானுங்க..அங்கே ஏற்பாடெல்லாம் பலமா இருந்தது..

நான் அதுவரைக்கும் ரெண்டு மூணு தடவை பீர் சாப்பிட்டு இருக்கேன் மத்தபடி அந்த வாடையே ஆகாது. ”வேண்டாம்பா! ஹாட் பழக்கமில்லை”ன்னேன்..”அய்யோ! சரக்கு பண்டிகைக்காக பாண்டில இருந்து புடிச்சுட்டு வந்தது..சும்மா மைல்டாதான் இருக்கும் சாப்பிடுங்க பிரதர்”னு ஒரே அழிச்சாட்டியம்..சரக்கு விண்டேஜ்..சரி,ஒரு ரவுண்ட் சாப்பிட்டு பார்ப்போம்னு எடுத்து ஒரே கல்ஃப்..ஆஹா! என்னடா இது பீர் அளவுக்கு கசக்கலையே அப்படின்னு நினைச்சுகிட்டே இன்னொரு கஃல்ப். அந்த எழவு சாப்பிட்ட உடனே ஏறாது ஒரு பத்து இருபது நிமிசம் ஆகும்னு ஒருத்தன் சொல்றதுக்குள்ளேயே நாலு லார்ஜ் அடிச்சுட்டேன்..கூட இருந்த பக்கிஸ்ல ஒருத்தன் கூட வேணாம் பாஸ்னு சொல்லவே இல்லை..அவனவன் எவ்வளவு அதிக ஷேர் அந்த சரக்குல முடிக்க முடியுமோ அந்த அளவு லாபம்னே குறியா இருந்தானுங்க..ஒரு அரைமணி நேரம்தான் சுய நினைவோட இருந்தேன்..அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு..

அதுக்கப்புறம் எல்லாமே ஃபேடவுட் காட்சிகள்தான்..வண்டில உட்கார்ந்தேன்னு தெரியும்..அப்புறம் பார்த்தா,சுடுகாட்டுக்கு பக்கத்துல நின்னு தம் அணைச்சது தெரியும்.அப்புறம் பார்த்தா, மேலே எல்லாம் மஞ்ச தண்ணியா இருக்கும்..சட்டையை கழட்டுறது ஞாபகம் இருக்கும். அப்புறம், பறை சத்தத்துக்கு நடுவுல செம குத்து குத்திட்டு இருப்பேன்..தெரு தெருவா கூட்டிப் போனானுங்க..எல்லா இடத்துலயும் குத்துன்னா குத்து செம குத்து..ஓட்டம்னா ஓட்டம் அப்படியொரு ஓட்டம்..அடிச்ச நாலு லார்ஜ்ம், போட்ட ஆட்டத்துல சும்மா ஆளை ஜிவ்வுன்னு தூக்கிருச்சு..

கடைசி ஃபேடவுட் சீன் எங்கேண்ணா, நண்பனோட வீட்டு திண்ணைல வாந்தி மேலே வாந்தி எடுத்துட்டு உட்கார்ந்து இருக்கேன்..அவனோட அப்பா, தலையை அழுத்தி பிடிச்சுருக்கார்..அம்மா “கருமம் புடிச்சவங்களா! புள்ளையை எங்கேயோ கூட்டிப் போய் என்னடா ஊத்தி கொடுத்தீங்க”ன்னு திட்டிகிட்டே கைல சொம்பு நிறைய மோர் வைச்சுகிட்டு டம்ளர்ல ஊத்தி கொடுத்துகிட்டு இருக்காங்க..தங்கை, கதவோரமா நின்னு சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கா.அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை..

ரொம்ப நேரம் கழிச்சு கண் திறந்து பார்த்தா கும்மிருட்டுல,ஏதோ ஒரு கொட்டகையில கயித்து கட்டில்ல கிடந்தேன்.அப்புறம் தூங்க்கிட்டேன்..காலைல சூரியன் சுள்ளுன்னு முகத்திலடிக்க எழுந்து பார்த்தா, எல்லா பசங்களும் சுத்தி உட்கார்ந்து இருந்தானுங்க.அகோர பசி, செமையான உடம்புவலி. “பிரதர்,நேத்து சாயந்தரம் நம்ம பண்டிகைல கதாநாயகனே நீங்கதான்.என்ன குத்து! என்ன டான்ஸ்”ன்னு ஒரே கிண்டல்..”பேரை கெடுத்துட்டீங்களேப்பா”ன்னு  சம்பந்தமில்லாம அவனுங்களை திட்டிட்டு, ”நான் வீட்டுக்கு வரலை, என்னை இப்படியே பஸ் ஏத்துன்னு சொல்லி” நண்பன் எவ்வளோவோ வற்புறுத்தியும்,அவன் வீட்டுக்கு போகலை..

ரெண்டு நாளா மனசெல்லாம் ஒரே பாரம்..அவங்கப்பாவுக்கு பெருசா ஒரு கடிதம் எழுதினேன்..என் வளர்ப்பு,குணாதிசயம்,எனக்கு மிகவும் பிடித்த அந்த வீடு, அந்த ஊர், அன்றைய செயலுக்கான காரணம், எனது முட்டாள்தனத்துக்கான வருத்தம்,இனி வாழ்நாளில் மது தொடமாட்டேன் என்ற உறுதியுடன் கடிதத்தை முடித்து ஒரு உறையில் போட்டு ”படிக்காம அப்பாகிட்ட கொடுத்துடுடா” எனக் கொடுத்து விட்டேன்..அடுத்த நாளே ஒரு சின்ன பதில் மடல்  அனுப்பினார்..”செய்த தவறை உணரும் பக்குவம் உனக்கு இந்த வயதில் இருப்பதே எனக்கு மிக மகிழ்ச்சி..நீ உயரங்கள் தொடுவாய்..மற்றபடி நீ எங்கள் குடும்பத்துக்கு இன்னொரு மகன்தான்.அன்றைய நிகழ்ச்சியினால் எதுவும் எள்ளளவும் மாறவேயில்லை. மீண்டும் சந்திக்க அவா” என எழுதியிருந்தார்.அக்கடிதம் படித்த உடன் கிடைத்த ரிலீஃப் மிகப் பெரியது..

இச்சம்பவம் நடந்து கிட்டதட்ட மூன்று-நான்கு வருடங்கள் மதுவை தொடவில்லை..அதன் பின் ஹாட் பக்கமே போகவில்லை..பீர் மட்டும் கொஞ்ச காலம் உண்டு..இப்போதெல்லாம், விண்டேஜ் மட்டும் சாப்பிடுவதில்லை..ஏதோ அந்த வரையிலாவது அந்த பெரியவருக்கு ஒரு மரியாதை இன்றும் :)

2 comments:

ராஜி said...

இதை தொடர்பதிவாக்கிடலாமே!

Yaathoramani.blogspot.com said...

முதல் குடி அனுபவம் எல்லோருக்கும் ஒண்ணு
இப்படியாக மறக்கமுடியாம இருக்கத்தாதான் இருக்கு
சிலர் அந்த அனுபவத்தை மறக்க முடியாம இருக்காங்க
பலர் குடியை மறக்க முடியாம இருக்காங்க
அவ்வளவுதான் வித்தியாசம்

Post a Comment