Monday, April 07, 2014

மகளுக்கு பெயர் வைத்த காதை!

பெண் குழந்த பெற்ற அப்பன்களுக்கு அதுவும் சிறுவயதில் இருந்தே பெண்வாசம் இன்றி நாட்களை கழிக்க சாபம் பெற்ற அப்பன்களுக்கு, பெண்குழந்தையை கையில் வாங்கிய நொடியில் இருந்து கால்கள் தரையில் நிற்காது. சடுதியில் மனத்திரையில் அவளுடன் சினேகமாக கழிக்கப் போகும் அந்திமக் காலம் வரையிலான பல காட்சிகள் ஊர்வலம் போக ஆரம்பிக்கும். நிதர்சனம் வேறென்று புரிவதெல்லாம் நாற்பது வயதில்தான். அப்படியாகப்பட்ட அப்பன்மார்கள், உலகையும்,தன்னையும் ரட்சித்து அரவணைக்க வந்த தேவதைக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் உவகை இருக்கிறதே.அடடா!

நாங்கள் முதல் குழந்தைக்கென பெயர் எதுவும் முடிவு செய்ய வில்லை.எந்த குழந்தையென்ற முன்முடிவு ஏதும் இல்லை. ”உன்னை மாதிரி தான்தோன்றிபயலுக்கெல்லாம் பொண்ணுதாண்டா பிறக்கும்” என்பது சகதர்மணியின் ஆசிர்வாதம்.அப்படியே ஆனது. மதியம் 2.30க்கு பாண்டிச்சேரி க்ளூனியில் பிறந்தாள். எப்பொழுதும்,எல்லாவற்றையும் மற்றுமொரு நிகழ்வு அல்லது இதிலென்ன இருக்கிறது என்ற பாவனையிலேயே கடக்கும் எனக்கும் அந்த சிசுவை புதிதாக கையில் ஏந்திய கண நேரம் ஏதோவொன்று நடந்தது :).

அறையில் சென்று மனைவி,குழந்தையை விட்டு விட்டு சென்றமர்ந்த இடம் அருகிலிருந்த பூங்கா.எவற்றிலும் நிலைகொள்ள முடியவில்லை.தகப்பனான பின்னர் உண்டான குழப்பமான மனநிலை.ஒரு மாதிரியான அவஸ்தை அது. அங்கிருந்து கிளம்பி, கடற்கரை சாலையிலிருந்த ஒரு பிரவுசிங் செண்டர் சென்றேன். நிறைய பெயர்கள் வடிகட்டி எடுத்து வந்தாலும், எதுவுமே என் மகளுக்கானது அல்ல என்று தோன்றியது. பிரிண்ட் எடுத்த தாள்களுடன் நடந்து சென்று, கடலை பார்த்து அமர்ந்து இருந்த போது சட்டென ’தயா’ என்ற பெயர் தோன்றியது. உடனே எழுந்து மனைவியிடம் சொல்லலாமென ஓடி வந்தால், ஐசியூவில் அரைமயக்கத்தில் கிடந்தாள்.

அவளுக்கு நினைவு வந்ததும் அருகிலிருந்தவனை பார்த்து சிரித்தவளிடம்,

 ”தயா”என்றேன்.

“ஆரம்பிச்சுட்டியா? மாடர்னா இல்லையே! ”.

”நல்லாருக்கு.இதுதான் பேர்”.

”வேற என்ன பேர் பார்த்து வைச்சுருக்க” என்றவளிடம், வேண்டுமென்றே அவளுக்கு பிடிக்காத பெயர் பட்டியல் ஒன்று வாசித்தேன்.

 ”என்னால இப்ப சண்டை போட முடியாது” என்றவள், காலையில் “அதையே வைச்சுக்கோ.நல்லாருக்கு”எனச் சொல்லி விட்டாள்.

No comments:

Post a Comment