Friday, January 03, 2014

மின்னரட்டையும், நினைவெரித்தலும்!

யாஹீ சேட் மூலம் குறுகிய காலம் பித்த நிலைக்கு தள்ளப் பட்ட பலரில் நானும் ஒருவன். 18 வயதிலேயே வேலைக்கு போக ஆரம்பித்தாயிற்று..நண்பர் குழாம் ஏதும் கிடையாது..பெரிதாக வாசிப்பிலும் அப்போது ஆர்வமில்லை. மணிக்கு, 15 ரூபாய் என நினைவு..முதலில், ஒன்று அல்லது இரண்டு மணிநேரம்தான் பிரவுசிங் சென்டரில் இருப்பேன்.. என்ன,ஏதென்று தெரியாமல், கண்ட கருமாந்திரத்தையும் பார்த்து விட்டு வெளிவரும் போது பெரும் ஆயாசமாக இருக்கும்..

அப்போதுதான் இந்த யாஹீ  அரட்டையில் சிக்கினேன்.. முதலில், ரூம் ரூமாக எட்டிப் பார்த்து கொண்டிருந்தவன், நமக்கு எதுவும் செட்டாகாது எனத் தோன்றிய பின், நாடு விட்டு நாடு பறந்த பொழுதுதான் அவள் அறிமுகமானாள்..சக்காரிகா. பங்களாதேஷை சேர்ந்தவள். எனக்கும், அவளுக்கும் ஒரே வயது. இருபதில் இருந்தோம். முதலில், விளையாட்டாக ஆரம்பித்த அரட்டை, பின் பித்தம் கொள்ள வைத்தது. ஞாயிறு காலை ஆனவுடன், பிரவுசிங் செண்டரில் நுழைந்தால் மாலைதான் வெளியேறுவது..சில நாட்களில், கிட்டதட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை சலிக்காமல் அரட்டை அடித்திருக்கிறோம்..இன்னதுதான் என்றில்லை..அந்த வயதுக்கே உரிய அனைத்தும் அரட்டையில் அரங்கேறும்..

அப்பொழுது, செல்ஃபோன் வாங்கியிருந்த புதிது..எண்கள் பரிமாறிக்கொண்டோம். அவளுக்கு ஆங்கிலம் சரியாக வராது. எனக்கு இந்தி தெரியாது..உடைந்த ஆங்கிலத்தில் மணிக்கணக்காக பேசுவோம்.வாரம் இரண்டு கடிதம், நிறைய புகைப்படங்கள் என பரிமாறப் பட்டது. நான் நினைத்த டிப்பிக்கல் இந்தியப் பையன் போலவே இருக்கிறாய்..மீசை மட்டும் பிடிக்க வில்லை..அதை எடுத்து விட்டு ஒரு புகைப்படம் அனுப்பு என்றாள்..முடியாதென்று விட்டேன். :)

கேரியரின் ஆரம்பக் காலம். சொல்லிக் கொள்ளும் படியான, சம்பளம் கிடையாது..ஆனால், ISD கால், இண்டர்நேசனல் கொரியர் என ஆட்டம் போட்டேன்:)..கிட்டதட்ட ஆறு மாதம் இப்படியே போனது..மேற்படிப்பு படிக்க வேறு ஊர் போகிறேன் எனச் சொன்னாள்..படிப்படியாக தொடர்பற்று போனது. அப்படியே, யாஹீவிலிருந்தும் வெளியேறி விட்டேன்.

திடீரென, ஆறேழு  வருடம் கழித்து ஒரு நாள் இரவு அழைத்தாள்..வெகுநேரம் பேசாமலிருப்பாள். பின் அழுவாள்..இப்படியே, மணித்துளிகள் ஓடியது..சமாதானம் செய்யவெல்லாம் தோன்ற வில்லை.. சீக்கிரம் யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கோ என்றேன்..படீரென பை எனச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டாள்.சக்காரிகாவின் கதை அவ்வளவுதான்!

திருமணமான புதிதில், மனைவியிடம் சக்காரிகாவின் கதையைச் சொல்லி, புகைப்படம் மற்றும் கடிதங்களை கொடுத்தேன். எதையும் பார்க்காமல், அமைதியாக சொன்னாள். படிக்க விருப்பமில்லை..ஆனால், உடனே, எரித்து விடு என. பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்து, அவள் முன்னேயே எரித்து விட்டேன் :)

No comments:

Post a Comment