Friday, January 03, 2014

மின்னரட்டையும், நினைவெரித்தலும்!

யாஹீ சேட் மூலம் குறுகிய காலம் பித்த நிலைக்கு தள்ளப் பட்ட பலரில் நானும் ஒருவன். 18 வயதிலேயே வேலைக்கு போக ஆரம்பித்தாயிற்று..நண்பர் குழாம் ஏதும் கிடையாது..பெரிதாக வாசிப்பிலும் அப்போது ஆர்வமில்லை. மணிக்கு, 15 ரூபாய் என நினைவு..முதலில், ஒன்று அல்லது இரண்டு மணிநேரம்தான் பிரவுசிங் சென்டரில் இருப்பேன்.. என்ன,ஏதென்று தெரியாமல், கண்ட கருமாந்திரத்தையும் பார்த்து விட்டு வெளிவரும் போது பெரும் ஆயாசமாக இருக்கும்..

அப்போதுதான் இந்த யாஹீ  அரட்டையில் சிக்கினேன்.. முதலில், ரூம் ரூமாக எட்டிப் பார்த்து கொண்டிருந்தவன், நமக்கு எதுவும் செட்டாகாது எனத் தோன்றிய பின், நாடு விட்டு நாடு பறந்த பொழுதுதான் அவள் அறிமுகமானாள்..சக்காரிகா. பங்களாதேஷை சேர்ந்தவள். எனக்கும், அவளுக்கும் ஒரே வயது. இருபதில் இருந்தோம். முதலில், விளையாட்டாக ஆரம்பித்த அரட்டை, பின் பித்தம் கொள்ள வைத்தது. ஞாயிறு காலை ஆனவுடன், பிரவுசிங் செண்டரில் நுழைந்தால் மாலைதான் வெளியேறுவது..சில நாட்களில், கிட்டதட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை சலிக்காமல் அரட்டை அடித்திருக்கிறோம்..இன்னதுதான் என்றில்லை..அந்த வயதுக்கே உரிய அனைத்தும் அரட்டையில் அரங்கேறும்..

அப்பொழுது, செல்ஃபோன் வாங்கியிருந்த புதிது..எண்கள் பரிமாறிக்கொண்டோம். அவளுக்கு ஆங்கிலம் சரியாக வராது. எனக்கு இந்தி தெரியாது..உடைந்த ஆங்கிலத்தில் மணிக்கணக்காக பேசுவோம்.வாரம் இரண்டு கடிதம், நிறைய புகைப்படங்கள் என பரிமாறப் பட்டது. நான் நினைத்த டிப்பிக்கல் இந்தியப் பையன் போலவே இருக்கிறாய்..மீசை மட்டும் பிடிக்க வில்லை..அதை எடுத்து விட்டு ஒரு புகைப்படம் அனுப்பு என்றாள்..முடியாதென்று விட்டேன். :)

கேரியரின் ஆரம்பக் காலம். சொல்லிக் கொள்ளும் படியான, சம்பளம் கிடையாது..ஆனால், ISD கால், இண்டர்நேசனல் கொரியர் என ஆட்டம் போட்டேன்:)..கிட்டதட்ட ஆறு மாதம் இப்படியே போனது..மேற்படிப்பு படிக்க வேறு ஊர் போகிறேன் எனச் சொன்னாள்..படிப்படியாக தொடர்பற்று போனது. அப்படியே, யாஹீவிலிருந்தும் வெளியேறி விட்டேன்.

திடீரென, ஆறேழு  வருடம் கழித்து ஒரு நாள் இரவு அழைத்தாள்..வெகுநேரம் பேசாமலிருப்பாள். பின் அழுவாள்..இப்படியே, மணித்துளிகள் ஓடியது..சமாதானம் செய்யவெல்லாம் தோன்ற வில்லை.. சீக்கிரம் யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கோ என்றேன்..படீரென பை எனச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டாள்.சக்காரிகாவின் கதை அவ்வளவுதான்!

திருமணமான புதிதில், மனைவியிடம் சக்காரிகாவின் கதையைச் சொல்லி, புகைப்படம் மற்றும் கடிதங்களை கொடுத்தேன். எதையும் பார்க்காமல், அமைதியாக சொன்னாள். படிக்க விருப்பமில்லை..ஆனால், உடனே, எரித்து விடு என. பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்து, அவள் முன்னேயே எரித்து விட்டேன் :)

கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு!

1995-ம் வருட கோடைக்கால கல்லூரி நாளொன்றின் டைரிக்குறிப்பு :)

இன்னைக்கு PFM  டெஸ்ட்.ஒரு பக்கம் கூட படிக்கலை. நேத்து அந்த நாயோட போயிருக்க கூடாது. YFM டெஸ்ட் முடிச்சுட்டு மத்தியானம் 1.00 மணிக்கு பஸ்ஸ்டாப் வந்தா சிவில் டிபார்ட்மெண்ட் லஷ்மியும், திவ்யாவும் கேப்ரியேல் க்ரூப்போட கடலை போட்டுட்டு இருந்தாங்க..எக்ஸாம் வேற நல்லா எழுதாத கடுப்புல, இதைப்பார்த்த உடனே சுர்ருன்னு கடுப்பாகிடுச்சு..வழக்கமா அந்த நேரத்துக்கு தம் போட மாட்டேன்..இதை பார்த்த உடனே அக்கா கடைக்கு போய் ஒரு கிங்ஸ் இழுத்துட்டு வந்து நின்னா, தலைவலி ஆரம்பிச்சுடுச்சு.எப்படித்தான், வெயில் பொளக்கற இந்நேரத்துக்கு கூட தக்காளி காரியத்துல கண்ணா இருக்கானுங்களோ..நம்ம கிளாஸ்லயும்தான் இருக்கே ரெண்டு..ஒண்ணை பார்த்தா நாம ஓடணும்..இன்னொருத்தி நம்மளை பார்த்தா ஓடறா..

சதாஸ் பஸ் பிடிச்சு பஸ்ஸ்டாண்ட் வந்து இறங்கறப்ப தலைவலி அதிகமாகி ஒரு அனாசின்-500 வாங்கிப் போட்டப்பத்தான் சாரதி வந்தான். டேய்! பங்காளி வாடா பீர் சாப்பிட போலாம்னான்..நான் வரலை பங்கு, பயங்கர தலைவலின்னேன்..ஏய் அதான் மாத்திரை போட்டீல்ல, சரியாய்டும்..சீனைப் போடாம வாடான்னு இழுத்துட்டு போயிட்டான்..எக்சாமும் சரியா பண்ணலை நாளைக்கு எக்சாமுக்கும் இன்னும் படிக்கலை, மதியம் பீர் கேக்குதான்னு மனசு உறுத்துச்சு..அப்புறம் டக்குன்னு மயிரே போச்சுன்னு தோணி அவன் கூட போய், மனோகரால ஒரு புஃல் பீர் அப்புறம் ஒரு ஆஃப் பீர்ன்னு அடிச்சு முடிக்கறப்ப நல்லாவே தெரிஞ்சது, எனக்கு ஏறிடுச்சுன்னு. மத்தியானத்துல எல்லாம் சரக்கு சாப்பிட்டதே இல்லை. அந்த இட்த்தோட நாத்தமே பொரட்டுச்சு..ஆனாலும், ரெண்டு புரோட்டா பிசைஞ்சு அடிச்சுருந்தேன். பில் செட்டில் பண்றப்ப, சர்வர்கிட்ட சாரதி வம்பிழுத்துட்டிருந்தான்..

நான் சொல்லாம, கொள்ளாம வெளியே வந்து நின்னு, 2ம் நம்பர் பஸ் வருதான்னு பார்த்தேன்..அப்பத்தான், 1st year சுப்பிரமணி சைக்கிள் ஸ்டேண்ட்ல இருந்து வெளியே சைக்கிள் எடுத்துட்டு வந்தான்..டேய் தம்பி நானும் வரேன்டா இருன்னேன்..அண்ணே! வெயில்ல டபுள்ஸ் எப்படி இவ்வளவு தூரம்னான்..மூடிட்டு ஓட்டு..கொஞ்ச தூரம் கழிச்சு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு பின்னாடி  ரெண்டு பக்கம் கால் போட்டு, நானும் பெடல் போட்டேன். மிதிச்சேனா இல்லையா, எப்ப வீட்டுக்கு வந்தேன்னே தெரியலை..

பின்னாடி தோட்டத்துல போய், வாந்தி மேல வாந்தி..தலை செம பாரம்..அப்படியே வாஷ் பண்ணிட்டு வீட்டுக்குள்ள வந்தா யாரையும் காணோம்..நேரா போய் பெட்ல விழுந்து தூங்கிட்டேன்.

Monday, August 26, 2013

முதல் குடி!

 
டிப்ளமோ இரண்டாவது வருடம். நட்பினால் சூழப்பட்ட பதின்ம வயது.சந்தோஷத்தின் உச்சியில் ஆட்டமும் பாட்டமுமாக கழிந்த நாட்கள்..அப்போதைய நெருங்கிய நண்பன் ஈரோடு பக்கமுள்ள கிராமத்தில் இருந்து வருவான்.அவனது கிராமத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும்  விழா..எல்லோரும் கண்டிப்பா வரணும் மாப்ளே என்று கூட்டிக் கொண்டு சென்று விட்டான்..அவனது உள்ளூர் நண்பர்கள் தயராக வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள்.  மஞ்சள் வயல்களின் ஊடே ரயில்வே கிராஸிங் தாண்டி அவனது கிராமம் சென்றோம்..வீட்டில் அவனது அப்பா,அம்மா மற்றும் தங்கை எல்லோருமே எனக்காக ஆர்வமாக காத்திருந்தார்கள்..பய புள்ள எந்நேரமும் நம்ம புராணத்தையே வீட்டுல ரெண்டு வருசமா சொல்லிட்டு இருந்து இருக்கான்..பெரும்பாலும் என் சாப்பாட்டைதான் சாப்பிடுவான்..அவனுடைய சாப்பாட்டை யாருக்காவது கொடுத்து விடுவான்..இந்த மாதிரி நிறைய.

ரொம்ப கவனிப்பு வீட்டுல.அவங்கப்பா வாத்தியார். ரொம்பவே சோஷியல்.  நாத்திகவாதி..வில்ஸ் சிகரெட் புகைப்பார்..”கண்ணு தம்மு ஏதாவது வேணுமா?”ன்னு முதல் சந்திப்புலயே அதிரடிச்சார்..எனக்கு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச பத்தாவது நிமிசத்துலயே, என் வீட்டை விட ரொம்ப பிடிச்சு போச்சு..பேசிக்கிட்டு இருக்கப்பயே அவனோட நண்பர்கள் கோழியை உறிச்சு கொண்டு வந்து வீட்டுல கொடுத்துட்டு, சிக்னல் கொடுத்தானுங்க..அப்படியே என்னை நகர்த்தி வண்டில உட்கார வைச்சு ஊர்வலம் கூப்பிட்டு போய், வரப்போரமா நடக்க வைச்சு, ஒரு பம்ப்செட் ரூம்ல உட்கார வைச்சானுங்க..அங்கே ஏற்பாடெல்லாம் பலமா இருந்தது..

நான் அதுவரைக்கும் ரெண்டு மூணு தடவை பீர் சாப்பிட்டு இருக்கேன் மத்தபடி அந்த வாடையே ஆகாது. ”வேண்டாம்பா! ஹாட் பழக்கமில்லை”ன்னேன்..”அய்யோ! சரக்கு பண்டிகைக்காக பாண்டில இருந்து புடிச்சுட்டு வந்தது..சும்மா மைல்டாதான் இருக்கும் சாப்பிடுங்க பிரதர்”னு ஒரே அழிச்சாட்டியம்..சரக்கு விண்டேஜ்..சரி,ஒரு ரவுண்ட் சாப்பிட்டு பார்ப்போம்னு எடுத்து ஒரே கல்ஃப்..ஆஹா! என்னடா இது பீர் அளவுக்கு கசக்கலையே அப்படின்னு நினைச்சுகிட்டே இன்னொரு கஃல்ப். அந்த எழவு சாப்பிட்ட உடனே ஏறாது ஒரு பத்து இருபது நிமிசம் ஆகும்னு ஒருத்தன் சொல்றதுக்குள்ளேயே நாலு லார்ஜ் அடிச்சுட்டேன்..கூட இருந்த பக்கிஸ்ல ஒருத்தன் கூட வேணாம் பாஸ்னு சொல்லவே இல்லை..அவனவன் எவ்வளவு அதிக ஷேர் அந்த சரக்குல முடிக்க முடியுமோ அந்த அளவு லாபம்னே குறியா இருந்தானுங்க..ஒரு அரைமணி நேரம்தான் சுய நினைவோட இருந்தேன்..அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு..

அதுக்கப்புறம் எல்லாமே ஃபேடவுட் காட்சிகள்தான்..வண்டில உட்கார்ந்தேன்னு தெரியும்..அப்புறம் பார்த்தா,சுடுகாட்டுக்கு பக்கத்துல நின்னு தம் அணைச்சது தெரியும்.அப்புறம் பார்த்தா, மேலே எல்லாம் மஞ்ச தண்ணியா இருக்கும்..சட்டையை கழட்டுறது ஞாபகம் இருக்கும். அப்புறம், பறை சத்தத்துக்கு நடுவுல செம குத்து குத்திட்டு இருப்பேன்..தெரு தெருவா கூட்டிப் போனானுங்க..எல்லா இடத்துலயும் குத்துன்னா குத்து செம குத்து..ஓட்டம்னா ஓட்டம் அப்படியொரு ஓட்டம்..அடிச்ச நாலு லார்ஜ்ம், போட்ட ஆட்டத்துல சும்மா ஆளை ஜிவ்வுன்னு தூக்கிருச்சு..

கடைசி ஃபேடவுட் சீன் எங்கேண்ணா, நண்பனோட வீட்டு திண்ணைல வாந்தி மேலே வாந்தி எடுத்துட்டு உட்கார்ந்து இருக்கேன்..அவனோட அப்பா, தலையை அழுத்தி பிடிச்சுருக்கார்..அம்மா “கருமம் புடிச்சவங்களா! புள்ளையை எங்கேயோ கூட்டிப் போய் என்னடா ஊத்தி கொடுத்தீங்க”ன்னு திட்டிகிட்டே கைல சொம்பு நிறைய மோர் வைச்சுகிட்டு டம்ளர்ல ஊத்தி கொடுத்துகிட்டு இருக்காங்க..தங்கை, கதவோரமா நின்னு சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கா.அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை..

ரொம்ப நேரம் கழிச்சு கண் திறந்து பார்த்தா கும்மிருட்டுல,ஏதோ ஒரு கொட்டகையில கயித்து கட்டில்ல கிடந்தேன்.அப்புறம் தூங்க்கிட்டேன்..காலைல சூரியன் சுள்ளுன்னு முகத்திலடிக்க எழுந்து பார்த்தா, எல்லா பசங்களும் சுத்தி உட்கார்ந்து இருந்தானுங்க.அகோர பசி, செமையான உடம்புவலி. “பிரதர்,நேத்து சாயந்தரம் நம்ம பண்டிகைல கதாநாயகனே நீங்கதான்.என்ன குத்து! என்ன டான்ஸ்”ன்னு ஒரே கிண்டல்..”பேரை கெடுத்துட்டீங்களேப்பா”ன்னு  சம்பந்தமில்லாம அவனுங்களை திட்டிட்டு, ”நான் வீட்டுக்கு வரலை, என்னை இப்படியே பஸ் ஏத்துன்னு சொல்லி” நண்பன் எவ்வளோவோ வற்புறுத்தியும்,அவன் வீட்டுக்கு போகலை..

ரெண்டு நாளா மனசெல்லாம் ஒரே பாரம்..அவங்கப்பாவுக்கு பெருசா ஒரு கடிதம் எழுதினேன்..என் வளர்ப்பு,குணாதிசயம்,எனக்கு மிகவும் பிடித்த அந்த வீடு, அந்த ஊர், அன்றைய செயலுக்கான காரணம், எனது முட்டாள்தனத்துக்கான வருத்தம்,இனி வாழ்நாளில் மது தொடமாட்டேன் என்ற உறுதியுடன் கடிதத்தை முடித்து ஒரு உறையில் போட்டு ”படிக்காம அப்பாகிட்ட கொடுத்துடுடா” எனக் கொடுத்து விட்டேன்..அடுத்த நாளே ஒரு சின்ன பதில் மடல்  அனுப்பினார்..”செய்த தவறை உணரும் பக்குவம் உனக்கு இந்த வயதில் இருப்பதே எனக்கு மிக மகிழ்ச்சி..நீ உயரங்கள் தொடுவாய்..மற்றபடி நீ எங்கள் குடும்பத்துக்கு இன்னொரு மகன்தான்.அன்றைய நிகழ்ச்சியினால் எதுவும் எள்ளளவும் மாறவேயில்லை. மீண்டும் சந்திக்க அவா” என எழுதியிருந்தார்.அக்கடிதம் படித்த உடன் கிடைத்த ரிலீஃப் மிகப் பெரியது..

இச்சம்பவம் நடந்து கிட்டதட்ட மூன்று-நான்கு வருடங்கள் மதுவை தொடவில்லை..அதன் பின் ஹாட் பக்கமே போகவில்லை..பீர் மட்டும் கொஞ்ச காலம் உண்டு..இப்போதெல்லாம், விண்டேஜ் மட்டும் சாப்பிடுவதில்லை..ஏதோ அந்த வரையிலாவது அந்த பெரியவருக்கு ஒரு மரியாதை இன்றும் :)

பின் நகர்ந்த காலம் - வண்ண நிலவன்

1949ல் பிறந்த வண்ணநிலவன் தனது முதல் சிறுகதையை 19வது வயதில் எழுதுகிறார்.அதற்கு பிறகான இரண்டு,மூன்று வருடங்களில், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, விக்ரமாதித்யன்,கி.ரா, பா.செயப்பிரகாசம்,தஞ்சை பிரகாஷ் என பல இலக்கிய ஆளுமைகளிடம் பரிச்சயமும்,நட்பும் கொள்கிறார்.

கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றிக் கொண்டே இலக்கிய தாகத்துக்கும் தீனி போடுகிறார்.கடும் வறுமையினால் சூழ்ந்த லெளகீக வாழ்வு அலைக்கழித்தாலும்,இலக்கியம் அவரை உத்வேகத்துடன் செலுத்திக் கொண்டிருக்கிறது.. வண்ணதாசனும், வல்லிக்கண்ணனும்,விக்ரமாதித்யனும் பெரும் ஆறுதலாய் இருக்கிறார்கள் (வண்ணதாசனிடம் இருந்து மட்டும் கிட்டதட்ட அறுநூறு கடிதங்கள் வாழ்நாளில் பெற்றிருக்கிறார்).  கிட்டதட்ட மூன்று வருடங்களில்,மேலே சொன்ன ஆளுமைகளிடம் இருந்த முக்கியமான அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்குமளவு இலக்கியம் அவரை ஆட்கொண்டிருக்கிறது..

தனது 24வது வயதில், 1973ல் ஒரு கைப்பையில் வண்ணதாசன் கொடுத்த இரண்டு சட்டை மற்றும் இவரிடமுள்ள இரண்டு வேஷ்டிகளை மட்டும் திணித்துக் கொண்டு, சட்டைப் பையில் வெறும் 31 ரூபாயுடன் சென்னைக்கு ரயிலேறுகிறார்..சென்னைக்கு ரயில் கட்டணம் அப்போது 16.. கடல்புரத்தில் எழுத்து பிரதியாக அவர் கையில் இருக்கிறது..பதிப்புக்கு போகவில்லை..

இதுவரை படித்துள்ள “பின் நகர்ந்த காலம்” புத்தகத்திலிருந்து.

சினிமாவாக இருந்தால், இதற்கப்புறம் வசந்தம் வீசி, வாழ்வில் பெரும் வெற்றி பெற்றிருப்பான் ஒரு கலைஞன்..ஆனால், யதார்த்தம் வேறல்லவா..

இலக்கியம் படைப்பாளியை அவனது கடைசி காலம் வரை வறுமையிலேயேதான் உழல வைக்குமென்றால் அந்த எழவு இலக்கியமே தேவையில்லை என நினைக்கிறேன்..ஒரே அமர்வில் படிக்கக் கூடிய அளவில், எழுத்து நடையில் உள்ள புத்தகம்தான் என்றாலும், என்னால் ஒவ்வொரு அத்தியாத்தையும் அவ்வளவு எளிதாக கடனேவென்று படித்து விட்டு தாண்ட முடியவில்லை :(

Wednesday, July 03, 2013

சார்!



தொடர்ச்சியான மூன்றாவது சிகரெட்டை இழுத்துக் கொண்டிருந்தேன்.நெஞ்செல்லாம் காந்தினாலும் ஏதோ ஒரு வீம்போடு புகைத்துக் கொண்டிருந்தேன்.மாலை நான்கு மணி இருக்கும்,அது நடந்த போது.நினைத்தால்,குபுக்கென்று கண்ணோரம் துளிர்க்கிறது.நைனா கூட நினைவு தெரிந்து மேலே கை வைத்ததில்லை. பத்திருபது ஆண்,பெண் செக்கர்ஸ் சூழ்ந்திருக்க, சாரிடம் அடிவாங்கி அந்த பெரிய கடையின் மத்தியில் நிலைகுலைந்து கிடந்தச் சித்திரம், அழிக்க அழிக்க மனதில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டே இருந்தது.தன்னிரக்கமும்,கையாலகத்தனமும் மனதை பிசைந்து கொண்டிருந்தது. டீக்கடை அக்கா, உறைந்து போய் உட்கார்ந்திருந்த என்னையே அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக சூபர்வைஸர் ராம் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டேயிருந்தான்.“மாப்ள! உன்னை அப்படியே கொத்தா தூக்கி சார் தள்ளி விட்டவுடனே எனக்கெல்லாம் குலையே நடுங்கிடுச்சு. பசங்க எல்லாம் தெறிச்சுட்டானுங்க.

யாராவது என்னை திட்டினாலோ அல்லது கிண்டல் செய்தாலோ, அவர்களின் வார்த்தைகளை,முகபாவங்களை, உடல்மொழியை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், அந்த ஏச்சில், கிண்டலில் உள்ள உள்ளடக்கத்தை மட்டும் பிடித்துக் கொண்டு அதையே திரும்ப திரும்ப அசைபோட்டு திரும்ப என்னிடம் அந்த குறைபாடோ அல்லது அந்த மாதிரியான சூழ்நிலையில் நான் மீண்டும் சிக்காமலிருக்கவோ முடிந்தவரை முயல்வேன்.இந்த முறை அப்படியிருக்க முடியவில்லை.நாலு சுவருக்குள் நடந்திருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது. நாள் முழுவதும் உட்கார்ந்து முதலாளி முதல் வேலையாட்கள் வரை காட்டு கத்தல் கத்தி வேலை வாங்கிய நான், அதே சப்ளையரின் கடையில், அனைவரின் முன்னாலும் நிலைகுலைந்து தரையில் வீழ்ந்த அவமானம் நடுக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.சிகரெட்டை ஆழ இழுத்து பதற்றத்தை வெல்ல முயன்று கொண்டிருந்தேன்.

பத்தாவது முடித்து விட்டு பாலிடெக்னிக்கில் சேர்ந்து விட்டேன்.மெக்கானிக்கல் எடுக்கப் போய், அதை விட டெக்ஸ்டைல்ஸ் பிரிவுக்கு கொஞ்சம் டொனேஷன் குறைவு எனக் கடைசி நிமிடத்தில் அப்பா பிரின்ஸ்பாலுக்கு எதிரே உட்கார்ந்து எடுத்த முடிவின் காரணமாக, டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் சேர்ந்தவன் நான். கொஞ்சம் கூட என்ன படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம் என உணராமலேயே, இயந்திரங்களின் படங்களை கூட மனனம் செய்து ஆனால் நல்ல மதிப்பெண்களோடு பதினெட்டு வயதில் டிப்ளமோ முடித்த இரண்டாவது மாதத்திலேயே இங்கே வேலைக்கு சேர்ந்து விட்டேன். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் உற்பத்தி தளம் இந்த சின்ன நகரத்தில். நண்பனொருவன் மூலம் கேள்விப் பட்டு, நேரடியாக வேலைக்கான விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு போன போது, சாரைத்தான் முதலில் சந்தித்தேன்.சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். துணியின் எடை சம்பந்தமாக சின்னதாக ஒரு கணக்கை மட்டும் போட்டுக் காட்டச் சொல்லி விட்டு அரட்டை பேச்சுக்கு திரும்பினார். ஜிம் கேரி, அல்பசினோ, கிரிக்கெட், ஃபுட்பால், பாலகுமாரன் என எனக்கு தெரிந்த அரைகுறைகளை வைத்து ஒரு வழியாக சமாளித்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் முதன்முறை ஆங்கிலம் திக்கலும் திணறலுமாக பேசியது அப்பொழுதுதான். தமிழில்தான் பேச ஆரம்பித்தேன்.எவ்வளவு தப்பா இருந்தாலும் பரவாயில்லை ஆங்கிலத்திலேயே பேசு என்றார். ரொம்பவே பரபரப்பாக இரவு ஏழு மணிக்கு இயங்கி கொண்டிருந்த்து அந்த அலுவலகம். அந்த சின்ன ஊரில்,டை கட்டிக் கொண்டு அவ்வளவு பேர் உள்ளே நடமாடியதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையில் ஒருமுறை கூட சட்டையை டக் இன் செய்யாத எனக்கு அச்சூழல் ரொம்பவே பிடித்துப் போனது.ஒரு மணி நேரம் பேசி முடித்த பின், கொஞ்சம் குசும்பனாத்தான் இருக்க பட் பராவாயில்லை வழிக்கு கொண்டு வந்துடுவேன். நாளைக்கு காலையில் இருந்து வேலைக்கு வரலாம்எனச் சொல்லி கை குலுக்கினார்.

டிப்ளமோ தேர்வெழுதிய இரண்டாவது மாதத்திலேயே, சொந்த ஊரில் அதுவும் ரூ.1500 சம்பளத்தில் (ஃபிரஷர்ஸ்க்கான சம்பளம் ரூ.750-900ம் தான் அப்போழுது நகரின் பல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் இருந்தது) அதுவும் முதல் நேர்முகத் தேர்விலேயே வேலை கிடைத்த மனம்கொள்ளாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன்.

வேலை ரொம்பவே சுவராஸ்யமாக இருந்தது.முதல் இரண்டு மாதங்கள் ஃபேக்டரியில் வேலை.அங்கேதான் நாங்கள் உற்பத்தி செய்யும் எல்லா துணிகளையும் செக் செய்து, பேக் செய்வோம்.நான் புதியவன் என்பதால் பெரிய வேலை எதுவும் இருக்காது.ஸ்கேல்,பேனா வைத்துக் கோடு போட்டு லெட்ஜர் ஓப்பன் செய்து உள்ளே வரும், வெளியே போகும் சரக்குகளை வரவு வைத்துக் கொண்டிருப்பேன்.திடீரென ஒரு நாள் சார் கூப்பிட்டு, நாம பெங்களூர் ஆபிஸ்க்கு அனுப்பிய சரக்கு இன்ஸ்பெக்சனில் ரிஜக்ட் ஆயிடுச்சு.ஒரு பத்து ஒர்க்கர்ஸ் கூட அனுப்பினா, ரீ செக் பண்ணி கொடுத்துட்டு வருவியா? என்றார்.உற்சாகமாக தலையசைத்தேன். அடுத்த நாளே, ஒரு பதினைந்து வானரங்களை கூட்டிக் கொண்டு, பெங்களூர் சென்று பதினெட்டு நாட்கள் தங்கி அந்த ஆர்டரை இரவு,பகலாக ரீசெக் செய்து பேக் பண்ணி, டெல்லியிலிருந்து வந்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் ok to ship ரிப்போர்ட் வாங்கி, லாரியை லோட் பண்ணி, சென்னைக்கு அனுப்பி விட்டு, இரவு ஒன்பது மணிக்கு சாருக்கு தகவல் சொன்னேன்.அன்றிரவே பஸ் ஏறி,அதிகாலை வீடு வந்து, குளித்து உடைமாற்றி, காலை ஒன்பதரைக்கு அலுவலகம் போய் சார் முன்னால் நின்றேன். “டேய்! நீ எங்கடா இங்கே?என்றார். “நைட் பெட்டி அனுப்பிச்சுட்டு காலைல கிளம்பி வந்துட்டேன் சார் என்றேன். “சரிடா! ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாமில்ல! என்றார். “அதெல்லாம் வேண்டாம் சார் என்றவனிடம் புன்னகைத்தவர், சரி இன்னைலருந்து ஆபிஸ்ல போடறேன் சமாளிச்சுடுவியா என்றார். “சரி சார் என்றவன் அன்று முதல் சூபர்வைசர் ஆனேன்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆர்டர்கள் மும்பையில் தலைமை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு அனுப்பப் படும். அறுபது முதல் எழுபது நாட்களில், அதை சப்ளையர்களிடம் கொடுத்து உற்பத்தி செய்து, எங்களிடம் உள்ள 150 செக்கர்ஸ் மற்றும் பேக்கர்ஸ்  கொண்டு செக்கிங் மற்றும் பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யவேண்டும்.சூபர்வைசரான எனது பணி, அந்த அறுபது நாட்களும் சப்ளையர் மற்றும் அவர்களின் அனைத்து உற்பத்தி தளங்களுக்கும் சென்று, தரத்தினை உறுதி செய்து,குறிப்பிட்ட நாட்களுக்குள் அனைத்து சரக்கினையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஃபேக்டரியுடன் ஒருங்கிணைந்து சரக்குகளை குறிப்பிட்ட தினத்துக்குள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.கிட்ட தட்ட 10 சூபர்வைசர்கள் இருந்தோம்.ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து சப்ளையர்களுக்கு பொறுப்பு.நான் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் எல்லாம் முக்கியமான சப்ளையர்களுக்கு சூபர்வைசராக ஆனேன். ஒரு ஆறு மாதம் பெரிய பிரச்னை ஏதும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த போது, ஒரு பின் மதியவேளையில் அந்தச் சம்பவம் நடந்தது.

சார் ரொம்பவே கோபக்காரர்.மும்பை அலுவலகத்துக்கு ஒரு கமிட்மெண்ட் கொடுத்து விட்டால், அதை தலைகீழாக நின்றாவது முடிக்க வேண்டும் என நினைப்பவர். பெருங்குரலெடுத்து கத்தினால், அடிவயிறு கலங்கும். ஆர்டர் ஸ்டேட்டஸ் டிஸ்கஸ் செய்யும் போது, அவர் கேட்கும் குறுக்கு கேள்விகள், எவ்வளவு முட்டாளாக வேலை செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்க வைக்கும். ஆர்டர்களில் பிரச்னை ஏற்படும் போது, சிகரெட் புகை சுழலும் அந்த அறைக்குள் நுழைந்து, அவரது அடிக்கண் பார்வை முறைப்பை எதிர்நோக்கும் போதே கிலி பிடிக்கும்.

ஒரு செவ்வாய் கிழமை இரவு ஒன்பது மணி போல் எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்ப ஆய்த்தமாகி கொண்டிருந்த போது, அந்த ஃபேக்ஸ் வந்த்து.ஆர்டர் # 1027 சனிக்கிழமை காலை சென்னை துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குகள் ஏர் ஃப்ரைட் ஆகும். ஃபேக்ஸ் வந்த உடனே, சார் பரபரப்பாகிவிட்டார். “யாரெல்லாம்பா 1027 ஆர்டர் பாக்கிறது.ஸ்டேட்டஸ் எடுத்துகிட்டு வாங்க என சவுண்ட் விட்டார். மொத்தம் பத்து சப்ளையர்களிடம் அந்த ஆர்டர் உற்பத்தியில் இருந்தது.அதில் என்னுடைய சப்ளையர் ஆறு பேர். பலிகடாக்கள் போல் இரண்டு, மூன்று சூபர்வைசர்கள் அவரது அறைக்குள் சென்றோம். “ம்!.சொல்லுங்கப்பா.டெலிவரி டேட் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு.எல்லா சரக்கும் சப்ளையர்கிட்ட ரெடிதானே! என்றார். மற்ற சூபர்வைசர்கள் எல்லாம், ரெடியா இருக்கு சார், காலையில உள்ளே எடுத்துடலாம் என்றனர்.நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒரு சப்ளையர் வசம் ஆர்டர் நிரம்பவே ஊத்தலில் இருந்தது. என்னடா பம்முற?! என்றார். இல்லை சார், அஞ்சு சப்ளையர்ர்கிட்ட சரக்கு ரெடியா இருக்கு.வீணா எக்ஸ்போர்ட்ஸ் மட்டும் ரெடியாக ஒரு நாலு நாளாகும்னேன்.எடுத்தார் ருத்ரதாண்டவம்.ஏண்டா, இதை இவ்வளவு நாளா சொல்லலை.எவ கூட படுத்து எந்திரிச்சு ஊர் பொறுக்கிட்டு இருந்த ன்னு ஆரம்பிச்சு சுமார் ஒரு மணி நேரம் செறிவான அர்ச்சனை கிடைத்தது.எல்லாரையும் உட்கார வைத்து, யார் யார் அடுத்த மூணு நாலு நாளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு ஆக்சன் பிளான் உடனே தயரானது. என்னிடம் முறைப்போடு “காலைல வீணா போய் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி வெள்ளிக்கிழமைக்குள்ளே என்னென்ன ரெடியாகும், என்ன ரெடியாகாதுன்னு லிஸ்ட் ரெடி பண்ணி கொண்டு வாஎன்று  சொன்னார். இரவோடு இரவாக வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளரை வீட்டில் போய் தூக்கி வந்து விடிய விடிய உட்கார்ந்து லிஸ்ட் எடுத்து காலைல கொண்டு போய் சாரிடம் கொடுத்தேன். அவரும் பாம்பேவுக்கு போன் மேல போன் போட்டு டிலே ஆகிற ஒரு குறிப்பிட்ட சரக்குக்கு மட்டும் ஏர் ஃபிரைட் அனுப்ப ஒரு வழியாக சம்மதம் வாங்கினார். எந்த சரக்கு ரெடியாகுமோ, அதுக்கு மட்டும் பேக்கிங் லிஸ்ட் டைப் பண்ணி பாம்பேவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியானது எக்ஸ்போர்ட்ஸ் டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ண. எனக்கு ஒருவனுக்குதான் தெரியும், நான் அவரிடம் கொடுத்த லிஸ்ட் எலுமிச்சைப் பழம் மட்டுமே. பலா அளவுக்கான சரக்குகளை வெள்ளிக்கிழமைக்குள் தயார் செய்ய வேண்டுமென்றால் ராட்சஸ உழைப்பு தேவை. கொஞ்சம் சரக்கு நெசவே செய்யப்படாமல் தறியில் கவுந்தபாடியிலும், வெள்ளக்கோவிலிலும் கிடந்த்தது.அனைத்தையும் லிஸ்ட்ல் சேர்த்தால்,ஏர் ஃப்ரைட் செலவு ஏகத்துக்கும் எகிறும்.எனவே, கண்டிப்பாக தயார் செய்ய முடியாதவற்றுக்கு மட்டும் லிஸ்ட் கொடுத்து விட்டு,மற்றதை ஏதேனும் செய்து சமாளித்து விடலாம் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையில் லிஸ்ட் கொடுத்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை வரை மூணு நாள் தூக்கம், தண்ணி கிடையாது.பெரிய ஆர்டர் என்பதால்,எங்களிடம் இருந்த 150 பேரை மட்டும் வைத்து மூன்று நாளில் பேக்கிங் செய்ய முடியாது. பாதி சரக்கினை எங்களது ஃபேக்டரியிலும், மீதியை சப்ளையர் கடைகளில் வைத்தும் பேக் செய்ய ஆரம்பித்தோம்.ஒவ்வொரு சப்ளையர் கடையிலும் 30-50 பேர் இரவு பகலாக வேலையில் இருந்தார்கள்.பெரும்பாலான ஆர்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள் எனக்கு மட்டுமே முழுவதும் தெரியும் என்பதால், டிவிஎஸ் 50 எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பேன். சூபர்வைசர் எல்லாம் அவனவன் ஆர்டர் முடிஞ்சு அடுத்தவனுக்காக பொதுச்சேவை செய்யும் எண்ணத்தில் குஷி மூடில் இருந்த்தார்கள்.நானொருவன் மட்டும் உள்ளும் வெளியும் எரிய சுழன்று கொண்டிருந்தேன்.ஃபேக்டரிகுள் சென்று வரும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை முறைக்க, நான் அவரை தவிர்க்கன்னு கண்ணாமூச்சி ஆடுவோம்.

வெள்ளிக்கிழமை காலையில்தான் அந்த குண்டை வீணா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வீசினார். தம்பி, அன்னிக்கு கொடுத்த கணக்குல ஒரு தப்பு இருக்கப்பா.கவுந்தபாடில இருந்து கருப்பு கலர் மேட் வரும்னு நினைச்சேன், அந்த கடங்காரன் கருப்பு டிசைனுக்கு பதிலா பச்சைக் கலரை நெசவு செஞ்சு அனுப்பி இருக்கான்.இப்ப கருப்பு டிசைன்ல சரக்கு குறையுதுப்பாஎன்றார். எவ்வளவு  அவரிடம் கத்த முடியுமோ கத்தி விட்டு,  அலுவலகம் சென்று, மென்று விழுங்கி சாரிடம் விசயத்தை  சொன்னேன். அவ்வளவுதான் ,சாமி மலையேறினார். கிட்டதட்ட, இருபது பக்க பேக்கிங் லிஸ்ட்.  இப்பொழுது அதில் மாற்றம் செய்தால், ஏற்கனவே பேக் செய்து அடுக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெட்டிகளின் பெட்டி எண் மாற்றப்பட வேண்டும்.மேலும், ரிவைஸ்டு பேக்கிங் லிஸ்ட் பற்றி பாம்பே அலுவலகத்தில் பேச முடியாது.குதறி எடுத்து விடுவார்கள்.ஏனெனில், அவர்கள் அனைத்து எக்ஸ்போர்ட் டாகுமெண்ட்ஸ்ம் மீண்டும் தயார் செய்து சென்னைக்கு அனுப்ப வேண்டும்.அன்றைய இரவுக்குள் இவை அனைத்தும் நடந்தாக வேண்டும். இவையனைத்தும் சேர்ந்து அவரை தகிப்பின் உச்சத்தில் வைத்து இருந்தது.வாடா எங்கூடஎன்று சொல்லி அவரது வண்டி பில்லியனில் உட்கார வைத்து நேராக வீணா கடைக்குச் சென்றார்.ஏன் சார், ஒரு லிஸ்ட் கொடுக்கிறப்ப அறிவு வேண்டாமா.சரக்குதான் டைம்க்கு ரெடி பண்ணலை, எவ்வளவு ரெடியாகும்னு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிற நீரெல்லாம் என்ன மசுருக்கு தொழில் பண்றீருன்னு விட்டு எகிற, ஆடிப்போன வீணா எக்ஸ்போர்ட் ஓனர், சார்! நான் கணக்கெல்லாம் கரெக்டாதான் சொன்னேன்.தம்பிதான் டென்சன்ல டிசைன் கலர் மாத்தி நோட் பண்ணிட்டாருன்னு ஒரே போடா போட்டாரு.

அப்பத்தான் அது நடந்தது. கோபத்தின் உச்சியில்,உன்னையெல்லாம் வைச்சுகிட்டு நான் எப்படிறா கம்பெனி நடத்தறது.உங்கப்பனா இப்ப பாம்பேல பேசறதுன்னு  சொல்லிட்டு கொத்தா சட்டைய பிடிச்சு தூக்கி வேகமாக என்னை சார் தள்ளி விட, வீணா எக்ஸ்போட்ஸ் கடையின் நடுவில் நிலைகுலைந்து விழுந்தேன்.

தம்மடித்து விட்டு நிரம்ப நேரம் உறைந்து போய் உட்கார்ந்து இருந்தவனுக்கு, அன்று ஷிப்மெண்ட் வெளியே போகணும்னு உறைக்க, எல்லாவற்றையும் மறந்து விட்டு மறுபடியும் வேலையில் முழுகினேன்.கிட்டதட்ட 150 ரகம் அந்த ஆர்டரில். எல்லோருக்குமே டவுட்.இன்னிக்கு இந்த ஆர்டர் முடிஞ்சு வெளியே போகுமா என்று.கடைசி நேரம் நெருங்க நெருங்க ஏகப்பட்ட பிரசர். இதைக் காணோம், அதைக்காணோம், இது ரிஜக்ட், அது ரிஜக்ட்னு. ஒவ்வொரு முறை ஃபேக்டரிக்குள்ளே ஓடிட்டு வெளியே வரும் போதும், ஒரு லாரி லோடாகிட்டு இருக்கும்.ரொம்ப தாமதமாத்தான் உறைத்த்து.எல்லோருக்கும் ஆர்டர் போகுமான்னு டவுட் இருந்தாலும், சார் மட்டும் என்கிட்ட எதுவும் மதியத்துக்கப்புறம் கேட்க வில்லையென்று.கிட்டதட்ட பத்து லாரி லோடு.கடைசி லோடு முடியும் போது விடிகாலை மூன்று மணி. லாரி ஓட்டுனரிடம், “அண்ணா! எப்படியாவது நாளைக்கு மதியம் பனிரெண்டு மணிக்குள்ள் கொண்டு போய் சென்னைல சேர்த்துருன்னு சொல்லி வண்டியை அனுப்பி விட்டு, தம்மடித்து விட்டு திரும்பினால், சார் பின்புறம் நின்று கொண்டிருந்தார். சாரிடாஎன்றார். நான் பதிலேதும் கூறாமல் விறைப்பாக நின்றேன்.Don’t feel bad da! Miles to go! But am extremely sorry!” என்று சொல்லி விட்டு தோளை பிடித்து, பக்கவாட்டில் இழுத்து சின்னதாக ஒரு ஹக் பண்ணி விட்டு டக்குன்னு திரும்பி பார்க்காம சென்று விட்டார். பத்தாவது லாரியை அனுப்பி விட்டு, அந்த ஹக் வாங்கிட்டு, நான் அன்று அந்த டிவிஎஸ் 50 ஓட்டிக் கொண்டு, ஆளரவற்ற நகரத்தின் தார்ச்சாலையில் வந்த போது கிடைத்த பரவசமும், ஆசுவாசமும் என் வாழ்வின் ஆகச்சிறந்த கணங்களில் முதன்மையானது.

இந்த ஆர்டர் நம்பர் 1027 சம்பவம் நடந்தது 1997ல். இப்பொழுது இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது, ஆர்டர் நம்பர் 7900 லோடாகி கொண்டு இருக்கிறது.ஏகப்பட்ட சம்பவங்கள் அதன் பிறகு நடந்து விட்டது. சூபர்வைசராக இருந்த நான், சீனியர் சூபர்வைசர்,புரடக்சன் கண்ட்ரோலர், அஸிஸ்டெண்ட் பிராஞ்ச் மேனேஜராகி இப்பொழுது பிராஞ்ச் மேனேஜர். சார் இப்ப ரீஜனல் மேனேஜர்.இப்பொழுதும்  இரண்டு பேரும் சண்டை போடுவோம்.இரண்டு மூன்று நாள் முறைத்துக் கொண்டு  இருப்போம். பிறகு சென்று பாரில் அமர்ந்து விடுவோம். :)

நாஞ்சில் நாடனின் அவர்களின் வைக்கோல்கதை படிக்கும் போதெல்லாம் மேற்சொன்ன சம்பவம் மனதில் வந்து கொஞ்சம் நேரம் நாஸ்டால்ஜியாவை அசை போடச் சொல்லும்.இன்று இறக்கிவைத்து விட்டேன். :)